சிவாஜி பேத்தி மீது ப்ரியாவின் கணவர் புகார்
சென்னை:
நடிகர் சிவாஜி கணேசனின் பேத்தியும், முதல்வர் ஜெயலலிதாவின் மாஜி வளர்ப்பு மகன் சுதாகரனின் மனைவியுமான சத்தியலட்சுமி தன்னை கொலை செய்து விடுவதாக தொலைபேசியில் மிரட்டியதாக, பெண் தயாரிப்பாளர் ப்ரியா நாயரின் கணவர் போலீஸில் புகார் கொடுத்துள்ளார்.
கேரளாவைச் சேர்ந்த ப்ரியா நாயரிடம் சுதாகரன் தொலைபேசியில் ஆபாசமாகப் பேசிய விவகாரம் பெரிதாகியுள்ளது. ஆனால், இந்த விவகாரத்தில் போலீசிடம் ப்ரியா நாயர் புகார் கொடுத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
முன்பு கஞ்சா கேசில் பிடிபட்ட சுதாகரன் தொடர்ந்து ஏதாவது சர்ச்சைகளில் சிக்கிக் கொண்டே வருகிறார். தனியாக பெரிய அளவில் வருமானம் என்று ஏதும் இல்லாத நிலையில் கோடிக்கணக்கில் சொத்து வைத்துள்ள இவர் மீது சொத்துக் குவிப்பு வழக்கும் உள்ளது.
சின்ன எம்ஜிஆர் என்று சொல்லிக் கொண்டு கூலிங் கிளாஸ் சகிதம் இரவு பகலாக வலம் வரும் சுதகரனின் கடைசி விவகாரம் தான் ப்ரியா நாயர்.
திருவண்ணாமலையில் ஒரு ஆசிரமத்தில் வைத்து இவரை சந்தித்த சுதாகரன், அவருக்கு சினிமா எடுக்க உதவுவதாகக் கூறி போனில் பேச ஆரம்பித்து, அப்படியே ஆபாசத்துக்குப் போனார்.
சுதாகரனின் தொல்லை தாங்க முடியாத ப்ரியா அதை டேப்பில் பதிவு செய்தார்.
சுதாகரன் மீது ப்ரியா நாயர் புகார் கூறிய அடுத்த நாளில் இருந்து ப்ரியா மீதே அடுத்தடுத்து வழக்குகள் பதிவாக ஆரம்பித்தன.
நடிக்க வாய்ப்பு வாங்கித் தருவதாக கூறி சிலரிடம் அவர் பண மோசடி செய்துள்ளார். திருப்பிக் கேட்டவர்களை ஆள் வைத்தும் அடித்துள்ளதாக புகார்கள் வந்துள்ளன.
இந் நிலையில் இரவு நேரத்தில் ப்ரியா நாயரின் வீட்டுக்குள் புகுந்த ரெளடிகள், சுதாகரனை மிரட்டினால் கொலை செய்வோம் என்று மிரட்டவே, தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் ப்ரியா நாயர்.
இந்தப் பின்னணியில், ப்ரியா நாயரின் கணவர் சத்தியமூர்த்தி சென்னை மாநகர காவல்துறை ஆணையர் நடராஜை சந்தித்து ஒரு புகார் மனு கொடுத்துள்ளார்.
அதில், சுதாகரனின் மனைவி சத்தியலட்சுமி (இவர் சிவாஜியின் மகள் சாந்தியின் புதல்வி) என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கொலை செய்து விடுவேன் என்று மிரட்டினார்.
எனவே எனக்கும், எனது மனைவிக்கும் தகுந்த பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இந்த புகார் தொடர்பாக விருகம்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தப் போகிறார்களாம்.
சத்திய லட்சுமியை சுதாகரன் சில காலம் பிரிந்து வாழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது. இவர்களது திருமணத்தைத் தான் கடந்த முறை ஜெயலலிதா ஆட்சியில் இருந்தபோது ரூ. 100 கோடி செலவு செய்து நடத்தினார்.
அடுத்த தேர்தலில் ஜெயலலிதாவின் தோல்விக்கு இந்த ஆடம்பரத் திருமணம் குறித்த எதிர்க் கட்சிகளின் பிரச்சாரமும் மூல காரணமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications