பாமகவில் உள் ஒதுக்கீடு: நிராகரித்தார் திருமா!
சென்னை:
விடுதலைச் சிறுத்தைகளுக்கு திமுகவில் இடம் கிடையாது. வேண்டுமானால் பாமக தனது தொகுதிகளில் சிலவற்றை விடுதலைச் சிறுத்தைகளுக்கு உள் ஒதுக்கீடாக கொடுக்கலாம் என திமுக தலைவர் கருணாநிதி கூறியிருப்பதை விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கண்டித்துள்ளார்.
அந்த யோசனையை ஒட்டுமொத்தமாக நிராகரிப்பதாகவும் அறிவித்துள்ளார்.திருச்சியில் செய்தியாளர்களிடம் பேசிய கருணாநிதி, விடுதலைச் சிறுத்தைகளுக்கு திமுகவில் இடம் உண்டா என்ற கேள்விக்குப் பதிலளிக்கையில், கூட்டணியில் கட்சிகள் அதிகம் இருக்கின்றன. இதனால் தொகுதிப் பங்கீடு பிரச்சனையாக உள்ளது.
எனவே பாமகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகளில் சிலவற்றை விடுதலைச் சிறுத்தைகளுக்கு ஒதுக்கலாம். அதை நாங்கள் ஆட்சேபிக்க மாட்டோம் என்று தெரிவித்திருந்தார்.
கருணாநிதி இவ்வாறு கூறியிருப்பதன் மூலம் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகளுக்கு இடம் இல்லை என்பது தெளிவாகி விட்டது.
அதேசமயம், பாமகவுக்கு கொடுக்கப்படும் தொகுதிகளில் சிலவற்றை விடுதலைச் சிறுத்தைகள் பெறலாம் என்று அவர் கூறியிருப்பது விடுதலைச் சிறுத்தைகள் வட்டாரத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருணாநிதியின் கருத்து குறித்து திருமாவளவன் கூறுகையில், இந்த யோசனையை நாங்கள் ஏற்க மாட்டோம். இது எங்களை அவமதிக்கும் பேச்சு, வன்மையாக கண்டிக்கத்தக்கது. பாமக எங்களுக்கு 20 சீட்களைக் கொடுத்தால் கூட அதை நாங்கள் ஏற்க மாட்டோம்.
கருணாநிதியின் பேச்சு நாங்கள் எதிர்பார்த்ததுதான். எங்களை திமுகவில் சேர்க்க வேண்டும் என்று எப்போதும் நாங்கள் கோரியதில்லை. பாமகவுடன் இருக்கும் கூட்டணியில் இருப்போம் என்று மட்டுமே கூறி வந்தோம்.
எனவே கருணாநிதி இப்போது கூறியிருப்பது எங்களுக்கு அல்ல, பாமகவுக்குத்தான்.
பாமக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று நினைத்து கருணாநிதி இவ்வாறு பேசுவதாக நான் கருதுகிறேன். எங்களை மட்டுமல்லாமல் பாமகவையும் சேர்த்தே அவமானப்படுத்தியுள்ளார் கருணாநிதி.
அதிமுகவில் வந்து சேருமாறு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த அழைப்பும் எங்களுக்கு வரவில்லை.
இந்தத் தேர்தலில் நாங்கள் போட்டியிடுவது வெறும் சில சீட்களை ஜெயிப்பதற்காக மட்டுமல்ல. எங்களது கட்சிக்கு தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் கிடைக்க வேண்டும்.
அதற்கு நாங்கள் 6 சதவீத வாக்குகளைப் பெற்றாக வேண்டும். எனவே அந்த எண்ணத்திற்குத்தான் நாங்கள் முக்கியத்துவம் கொடுக்கிறோம் என்றார் திருமாவளவன்.
திருமாவளவன் கூறுவதைப் பார்க்கும்போது தனித்துப் போட்டியிடக் கூடிய வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக தெரிகிறது.
பாமக அவர்களை சமாதானப்படுத்துவதில் தோல்வியடைந்தால் கடைசி நேரத்தில் அதிமுகவுடன் திருமாவளவன் கூட்டணி அமைக்கக் கூடிய வாய்ப்பும் உள்ளது.