மறைமலை அடிகளின் பேத்திக்கு வைகோ உதவி
சென்னை:
வறுமையில் வாடி வரும் தமிழறிஞர் மறைமலை அடிகளின் பேத்தி சுந்தரத்தம்மையை சந்தித்து அவருக்கு ரூ. 25,000 நிதியுதவி அளித்தார் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ.
தமிழறிஞர் மறைமலை அடிகளின் பேத்தி சுந்தரத்தம்மை. இவர் மிகவும் வறுமையில் வாடி வருகிறார். இவரது கணவரும் ஒரு தமிழறிஞரே. 73 வயதாகும் சுந்தரத்தம்மையை அவரது ஒரே மகளான கலைச்செல்விதான் பார்த்துக் கொள்கிறார்.சமீபத்தில் வீட்டில் வழுக்கி விழுந்த சுந்தரத்தம்மைக்கு வைத்தியம் பார்க்கக் கூட வீட்டில் பணம் இல்லை. இதனால் கலைச்செல்வி மனம் உடைந்து இருந்தார்.
இதுகுறித்து தெரிய வந்தவுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ விரைந்து சென்று சுந்தரத்தம்மையைப் பார்த்து நலம் விசாரித்தார். பின்னர் அவரிடம் ரூ. 25,000 பணத்தைக் கொடுத்து வைத்தியச் செலவுக்கு வைத்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.
பின்னர் சுந்தரத்தம்மையின் மகள் கலைச் செல்வியிடம் அவர் பேசினார். வைகோவுடன் மதிமுக பொருளாளர் கண்ணப்பனும் வந்திருந்தார்.
இதேபோல சென்னையைச் சேர்ந்த பிரபல ஜோதிடர் எஸ்.ஏ.பி. வரதனும், ரூ. 51,000 நிதியுதவி வழங்கியுள்ளார்.
தங்களின் நிலையை அறிந்து உதவிய அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி கூறுவதாக கலைச்செல்வி மனம் உருக கூறினார்.
தமிழுக்கு மகா சேவை புரிந்த மறைமலைடிகளாரின் குடும்பத்துக்கு உடனே உதவி வழங்க வேண்டியது தமிழக அரசு கடமை. கடமையைச் செய்வார்களா?