சிவகாசி-பலி 10 ஆனது-உறவினர்கள் போராட்டம்
சிவகாசி:
சிவகாசி அருகே பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கர வெடிவிபத்தில்இறந்தவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்ந்துள்ளது. இந் நிலையில் விபத்தில்உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அவர்களது உடல்களை வாங்க மறுத்துபோராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மாரனேரி கிராமத்தில் உள்ள பெப்சி ஃபயர் ஒர்க்ஸ் என்ற பட்டாசுத் தொழிற்சாலையில் புதன்கிழமை மாலை நாலரை மணியளவில் மணி மருந்து என்ற வேதிப் பொருளை வெயிலில் உலர வைத்துக் கொண்டிருந்தனர்.இப்படி வெயிலில் உலர வைப்பது மிகவும் ஆபத்தானதாகும்.
வெயில் அதிகமாக இருந்ததால் மணி மருந்து அதிக வெப்பமடைந்து தீப்பிடிக்கத் தொடங்கியது. இது அருகில் இருந்த ராக்கெட்டுகள் வைக்கப்பட்டிருந்த அறைக்குள் பரவியது. இதனால் ராக்கெட்டுகள் சரமாரியாக அங்கும் இங்குமாக பறக்கத் தொடங்கின.
இதில் பல ராக்கெட்டுகள் பறந்து வெடிமருந்துகள், பட்டாசுகள் வைக்கப்பட்ட அறையில் விழுந்ததில், அவை வெடித்துச் சிதறின.
இந்த பயங்கர விபத்தில் 11 கட்டடங்கள் சேதமடைந்தன. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 6 பேர் இறந்தனர்.
சிவகாசி மற்றும் விருதுநகர் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டவர்களில் மேலும் 4 பேர் சிகிச்சை பலனளிக்காமல் இறந்தனர். இன்னும் 13 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் நடந்த இடத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் முகம்மது அஸ்லம், காவல்துறைக் கண்காணிப்பாளர் ஜெயச்சந்திரன் ஆகியோர் சென்று பார்த்தனர்.
முதல்வர் இரங்கல்:
சிவகாசி பட்டாசுத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 10 பேர் இறந்துள்ளது குறித்து முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.
இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ. 15,000ம், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ. 6000ம் வழங்கப்படும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.
உறவினர்கள் போராட்டம்:
இந் நிலையில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் அவர்களது உடல்களைவாங்க மறுத்து இன்று போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்குப் பின்னர் இன்று அவர்களதுஉறவினர்களிடம் வழங்கப்பட்டன.
ஆனால் பட்டாசுத் தொழிற்சாலையில் பாதுகாப்பு வசதிகள் சரியாக செய்யப்படாதகாரணத்தால்தான் 10 பேரும் இறந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்டபட்டாசுத்தொழிற்சாலை அதிபர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரண நிதி தர வேண்டும்என்று கோரி உடல்களை வாங்க மறுத்து போராட்டத்தில் குதித்தனர்.
சிவகாசி -ஸ்ரீவில்லிபுத்தூர் சாலையில் அவர்கள் மறியல் போராட்டத்தில் குதித்ததால்அந்தச் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.