புதுச்சேரி ஆகிறது பாண்டிச்சேரி!
பாண்டிச்சேரி:
பாண்டிச்சேரி யூனியன் பிரதேசத்தின் பெயர் விரைவில் புதுச்சேரி என்று மாற்றப்படவுள்ளதாக அம் மாநிலத்தைச் சேர்ந்த பாமக எம்.பி. ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,பாண்டிச்சேரியின் பழைய பெயர் புதுச்சேரி. காலம் காலமாக வழங்கி வந்த இந்தப் பெயர் காலப் போக்கில் பாண்டிச்சேரி என மாற்றம் கண்டு விட்டது.
புதுச்சேரி என்ற பழைய பெயரை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்று இம் மாநில தமிழ் அறிஞர்கள், மக்கள் கோரி வந்தனர். இந்தக் கோரிக்கை தொடர்பாக கடந்த 1980ம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி புதுவை சட்டசபையில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
கடந்த 1996ம் ஆண்டு ஜூலை 30ம் தேதி இன்னொரு தீர்மானத்தையும் புதுச்சேரி சட்டசபை நிறைவேற்றியது. இவை எதற்கும் பலன் இல்லாமல் போனதால், கடந்த 1999ம் ஆண்டு ஏப்ரல் 24ம் தேதி இன்னொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்தப் பிரச்சினை குறித்து வரலாற்றுப் பூர்வ ஆதாரங்களுடன் மத்திய உள்துறை அமைச்சகத்திடம் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. தொல்பொருள் துறைக்கும் இந்தத் தகவல்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
அவர்கள் விரிவாக ஆய்வு செய்து இந்தப் பெயர் மாற்றத்தை ஏற்றுக் கொள்ளலாம் என்று மத்திய உள்துறைக்கு பரிந்துரை அனுப்பி வைத்துள்ளனர்.
தற்போது இந்த முடிவு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அது கிடைத்தவுடன் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும்.
அதன் பின்னர் பாண்டிச்சேரி என்ற பெயர் புதுச்சேரி என்று அதிகாரப்பூர்வமாக மாற்றப்படும். நடப்பு கூட்டத் தொடரிலேயே இந்த சட்ட மசோதாவை தாக்கல் செய்ய முயற்சிக்கப்பட்டு வருகிறது என்று கூறியுள்ளார் ராமதாஸ்.
சென்னை, மும்பை, கொல்கத்தா வரிசையில் பாண்டிச்சேரியும் புதுச்சேரியாக மாறவுள்ளது. இதேபோல பெங்களூர் என்ற பெயரை பெங்களூரு எனவும், மைசூர் என்ற பெயர் மைசூரு எனவும் மாற்ற கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளது நினைவிருக்கலாம்.