தலித்துகளுக்கு என்ன செய்தார் கருணாநிதி? திருமா
காரைக்கால்:
நான் தலித்துகளின் மாமன், மச்சான் என்று வசனம் பேசும் திமுக தலைவர் கருணாநிதி அவர்களுக்காக என்ன செய்தார் என்று விடுதலைச் சிறுத்தைகள் பொதுச் செயலாளர் திருமாவளவன் கேட்டுள்ளார்.
புதுவை மாநிலம் காரைக்காலில் விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நடந்த மண்ணுரிமை மாநாட்டில் நேற்று கலந்து கொண்டு திருமாவளவன் பேசுகையில், இலங்கையில் மொத்தமே 35 லட்சம் தமிழர்கள்தான்.ஆனால் அவர்களுக்காக தனி நாடு கோரி போராடி வருகிறார் பிரபாகரன். ஆனால் இந்தியாவில் 30 கோடி தமிழர்கள் உள்ளனர். இவர்களுக்காகப் போராட இங்கு யாரும் தயாராக இல்லை.
நான் தலித்துக்களின் மாமன், மச்சான். அவர்கள் வீட்டில் போய் உட்கார்ந்து சாப்பிட்டேன் என்று வசனம் பேசி வருகிறார் திமுக தலைவர் கருணாநிதி. ஆனால் அந்த தலித்துகளுக்காக அவரும், மற்றவர்களும் என்ன செய்து விட்டார்கள் என்று கூற முடியுமா?
பாமகவுக்கு இடம் ஒதுக்குவார்களாம், அவர்கள் எங்களுக்கு தொகுதிகள் தருவார்களாம். இந்த உள் ஒதுக்கீட்டில் எங்களுக்கு உடன்பாடு இல்லை. தனியாக கூட்டணியில் சேர்த்து இடம் ஒதுக்கினால் சேருவோம், இல்லாவிட்டால் 3வது அணியை உருவாக்க முயற்சிப்போம்.
புதுவையைப் பொருத்தவரை அங்கு பாமகவுடன் கூட்டணி அமைப்போம். வன்னியர் ஒருவரை அங்கு முதல்வர் பதவியல் அமர்த்த தயாராக உள்ளோம்.
தமிழகத்திலும், புதுவையிலும் விடுதலைச் சிறுத்தைகளுக்கு எதிரான அடக்குமுறைக்கு எதிராகவும், இஸ்லாமியர்கள், தலித் கிறிஸ்தவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு பெறுவதற்கும் தொடர்ந்து போராடுவோம் என்றார் திருமாவளவன்.