மக்களே தெய்வங்கள்.. சொல்கிறார் ஜெ
சென்னை:
2004, 2005ம் ஆண்டுக்கான தமிழக அரசின் கலைமாமணி விருது வழங்கும் விழா இன்று சென்னையில் நடந்தது.
நடிகர்கள் விக்ரம், சூர்யா, வடிவேலு, சார்லி, நடிகைகள் ஜோதிகா, ஸ்னேகா, மற்றும் இயல், இசை, நாடகத்துறையில் சிறந்து விளங்கும் 123 பேருக்கு முதல்வர் ஜெயலலிதா விருதுகளை வழங்கினார்.சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடந்த விழாவில் ஜெயலலிதா பேசியதாவது:
இன்று இந்த இனிய விழாவில் கலைமாமணி விருதுகளை வழங்கியுள்ளேன். ஆனால், குறை சொல்வதையே தனது இயல்பாகக் கொண்ட ஒருவர் (கருணாநிதி), இதைக் கொச்சைப்படுத்தி தேர்தலை மனதில் வைத்து இந்த விருதுகளை நான் வழங்குவதாகக் கூறியுள்ளார்.
திரைப்பட விருதுகள் வழங்காமல், வழங்க விருப்பம் இல்லாமல், கோப்பு மூட்டை கட்டி வைக்கப்பட்டிருந்ததாகவும், இப்போது தேர்தல் என்றதும் அந்தக் கோப்பை தேடி எடுத்து அவசர, அவசரமாக விருது வழங்கியதாகவும், அதைப் போலவே கலைமாமணி விருதையும் வழங்கியுள்ளதாகவும் அவர் திருவாய்மலர்ந்துள்ளார்.
இதன் பின்னர் ஒரு பெரிய கதையைச் சொன்ன முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து பேசுகையில், நான் அறிவிக்கும் அறிவிப்புகள், செய்யும் செயல்கள் அனைத்தும் மக்கள் நலனைக் கருத்தில் கொண்டே செய்யப்படுவன ஆகும்.
மக்களாகிய தெய்வத்திற்கு செய்யப்படும் வழிபாடாகவே மக்கள் நலத் திட்டங்கள் அனைத்தையும் நான் செயல்படுத்தி வருகிறேன். ஆனால், தேர்தல் கண்ணோட்டத்திலேயே எதையும் செய்யும் ஒருவருக்கு நான் கொண்டு வரும் நல்ல திட்டங்கள் கூட தேர்தலுக்காக செய்வது போல தெரிகிறது.
பாவம் அவர் என்ன செய்வார், தேர்தல் பயம் அவரை ஆட்டிப் படைக்கிறது. மிரண்டவர் கண்ணுக்கு தெரிவதெல்லாம் தேர்தல் தான்.
எனது அரசின் செயல்களால் தமிழகத்தின் நாட்கள் எல்லாம் ஒரு சாதனைத் திருநாளாகவே இருப்பதைக் காணப் பொறுக்காமல் உள்நோக்கத்துடன் பேசுகிறார்கள்.
ஆனால், எந்த எதிர்ப்புக்கும் அஞ்சாமல் நான் மக்களுக்கு தொடர்ந்து நல்ல திட்டங்களை அமல்படுத்திக் கொண்டே இருப்பேன் என்றார் ஜெயலலிதா.
2004ம் ஆண்டுக்கான கலைமாமணி விருது பெற்றோர்:
நடிகைகள் கமலா காமேஷ், சி.ஆர்.சரஸ்வதி, சார்லி, பாடகர் பி.பி.ஸ்ரீனிவாஸ், தென்கச்சி சுவாமிநாதன், மாதிரிமங்கலம் சுவாமிநாதன், பழனி தெய்வக்குஞ்சரம், ஜெயந்தி சுப்ரமணியம், கோபிகா வர்மா, கிரேஸி மோகன் உள்ளிட்ட 67 பேர்.
பொற்கிழி பெற்றோர்:
நலிவடைந்த கலைஞர்களுக்கான பொற்கிழி பெறுவோர் ராணி சோமநாதன், சோமசுந்தர ஓதுவார், இசை நாடக நடிகை சாரதா.
திறக்கப்பட்ட உருவப் படங்கள்: விருது வழங்கும் விழாவின்போது கல்கி கிருஷ்ணமூர்த்தி, செம்மங்குடி சீனிவாசய்யர், எம்.எஸ்.சுப்புலட்சுமி, வி.கே.ராமசாமி, இயக்குனர் மாதவன், நாகி ரெட்டி உள்ளிட்ட 12 பேரின் உருவப் படங்கள் திறக்கப்பட்டன.
2005க்கான கலைமாமணி விருது பெற்றோர்:
நடிகர்கள் விக்ரம், சூர்யா, வடிவேலு, இயக்குனர் ரவிக்குமார், நடிகைகள் ஜோதிகா, ஸ்னேகா, இயக்குனர் வாசு, பாடகர்கள் அனுராதா ஸ்ரீராம், ஹரிஹரன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் , சுதா சேஷயன், பரதநாட்டிய ஆசிரியை ராதா, நாடக நடிகர் பி.ஆர்.துரை, கவிதாலயா கிருஷ்ணன், பாம்பே ஞானம், சாந்தி கணேஷ், ஒப்பனைக் கலைஞர் பீதாம்பரம் (இயக்குன வாசுவின் தந்தை), வி.ஜி. சந்தோஷம்
பொற்கிழி பெற்றோர்:
முருகேசன், சண்முகம், சீதாலட்சுமி.
திறக்கப்பட்ட உருவப் படங்கள்:
நிகழ்ச்சியின்போது ஜெமினி கணேசன், மேஜர் சுந்ததரராஜன், பாடகி ஜிக்கி, நடிகை பானுமதி உள்ளிட்ட 7 பேரின் திருவுறுவப் படம் திறக்கப்பட்டன.
கலைமாமணி விருது பெற்றவர்களுக்கு 3 பவுன் தங்கப் பதக்கம் வழங்கப்பட்டது.
நலிவடைந்த கலைஞர்களுக்கான பொற்கிழி பெற்றவர்களுக்கு தலா ரூ. 15,000 வழங்கப்பட்டது.
ஜெ பாட்டு பாடிய சீனிவாஸ்:
நிகழ்ச்சியில் பேசிய பாடகர் பிபி சீனிவாஸ், காலங்களில் வசந்தம் பாடலை மாற்றி காலங்களில் ஜெ.ஜெ. வசந்தம் எனறும் பாடினார்.
ஜோடி போட்ட சூர்யா-ஜோ
அதே போல விருது வாங்க வரிசையில் நின்ற கலைஞர்களில் சூர்யாவுக்கு அடுத்து ஜோதிகா நின்றிருந்தார். அந்த ஜோடி கடலை போட்டபடியே முன்னேற பார்வையாளர்கள் தரப்பில் இருந்து இவர்களுக்கு பெரும் அப்ளாஸ் கிடைத்தது.
விருதை வாங்கிய ஸ்னேகா, ஜெயலலிதாவின் காலில் தொபுக் என விழுந்து ஆசி பெற்றார்.
விருது வாங்க விக்ரம் மேடை ஏறியபோது கூட்டத்தில் விசில் சத்தம் பறந்தது.












Click it and Unblock the Notifications