தமிழகம், புதுவையில் ஒரே நாளில் தேர்தல்?
சென்னை:
தமிழக சட்டசபைத் தேர்தலை ஒரே நாளில் நடத்தி முடிக்க அதிமுக, திமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் தேர்தல் ஆணையரை வலியுறுத்தியுள்ளன.
சென்னை வந்த தேர்தல் ஆணையர் கோபாலசாமி, தலைமைச் செயலகத்தில் உள்ள கூட்ட அரங்கில் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளுடன் தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.இக்கூட்டத்தில், அதிமுக சார்பில் ஓ.எஸ்.மணியன், வக்கீல் ஜோதி, திமுக சார்பில் துரைமுருகன், டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், நாராயணன், பாமக சார்பில் ஜி.கே.மணி, ஜெயராமன்,
பாஜக சார்பில் வைத்தியலிங்கம், ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் துரை மாணிக்கம், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சார்பில் ஆறுமுக நைனார் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சுமார் ஒரு மணி நேரம் நடந்த இந்தக் கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும் தங்களது கருத்துக்களை எடுத்து வைத்தன.
வாக்காளர் பட்டியல் திருத்தம், புகைப்பட அடையாள அட்டை வழங்கும் பணி, வாக்குப் பதிவு, மின்னணு இயந்திரப் பயன்பாடு உள்ளிட்டவை குறித்து அனைத்துக் கட்சிகளும் கருத்து தெரிவித்தன.
இதில் அனைத்துக் கட்சிகளும் ஒரே குரலில் எடுத்து வைத்த கருத்து, ஒரே நாளில் வாக்குப் பதிவை நடத்த வேண்டும் என்பதுதான்.
கலந்து கொண்ட அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளும் இதை ஒட்டுமொத்தமாக வலியுறுத்தினர்.
கூட்டத்தில் பேசியது குறித்து துரைமுருகன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
அரசு ஊழியர்கள் வேலை நிறுத்தத்தின்போது தற்காலிகமாக நியமிக்கப்பட்ட 17,000 அரசு ஊழியர்களை தேர்தல் பணிகளில் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று கோரியுள்ளோம். (பின்னர் இவர்கள் நிரந்தரம் செய்யப்பட்டுவிட்டனர். இதனால் இவர்கள் அதிமுகவுக்கு ஆதரவாக செயல்படுவார்கள் என திமுக கருதுகிறது).
அதேபோல தமிழகத்திலும், புதுவையிலும் ஒரே நாளில் வாக்குப் பதிவு நடத்தக் கோரியுள்ளோம். கடைசி நிமிடம் வரை வாக்காளர்களை சேர்த்துக் கொண்டிருக்கக் கூடாது.
அனைத்து வாக்காளர்களுக்கும் புகைப்பட அடையாள அட்டை வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியுள்ளோம் என்றார்.
தேர்தல் தேதி முடிவு செய்யப்பட்ட பின்னர் மீண்டும் ஒரு முறை அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தப்படும் என பின்னர் கோபாலசாமி தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications