காளிமுத்துவை சந்தித்தார் கருணாநிதி
சென்னை:
உடல் நலக்குறைவால் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அதிமுக அவைத் தலைவர் காளிமுத்துவை, திமுக தலைவர் கருணாநிதி சந்தித்து நலம் விசாரித்தார்.
திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமியின் மகன் கஜராஜன் இருதயக் குழாயில் அடைப்பு ஏற்பட்டு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.அப்பல்லோ மருத்துவமனைக்கு சென்ற கருணாநிதி, கஜராஜனை சந்தித்து நலம் விசாரித்தார்.
பின்னர் மருத்துவமனையின் முதல் தளத்தில் அனுமதிக்கப்பட்டுள்ள காளிமுத்துவின் அறைக்குச் சென்றார்.
காளிமுத்துவை சந்தித்து நலம் விசாரித்தார். சிறிது நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்த கருணாநிதி பின்னர் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.
கருணாநிதியுடன், துரைமுருகன், ஸ்டாலின் ஆகியோரும் வந்திருந்தனர்.
இதுகுறித்து திமுக தரப்பில் கூறுகையில், அரசியலுக்கு அப்பாற்பட்ட நட்பின் காரணமாகவும், அரசியல் நாகரீகம் காரணமாகவும் காளிமத்துவை கருணாநிதி சந்தித்தார்.
திமுகவுடன் நீண்ட கால நட்பு கொண்டிருந்தவர் காளிமுத்து. சில காலம் திமுகவிலும் இருந்தார். அந்த நட்பின் அடிப்படையில்தான் காளிமுத்துவை கருணாநிதி சந்தித்தார் என்று விளக்கினர்.
முதல் முறை காளிமுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது அவரை முதல்வர் ஜெயலலிதா ஓடோடிச் சென்று பார்த்தார். ஆனால் தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுவரை அவர் பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.