யாருக்கு ஆதரவு?-லாட்டரி வியாபாரிகள் மிரட்டல்
சென்னை:
லாட்டரி டிக்கெட் மீதான தடையை நீக்குவதாக உறுதியளிக்கும் கட்சிக்கே தங்களது ஆதரவு என்று அகில இந்திய லாட்டரி வியாபாரிகள் மற்றும் சார்பு தொழில்கள் கூட்டமைப்பின் தலைவர் உஸ்மான் பயஸ் கூறியுள்ளார்.
தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு அரசு தடை விதித்துள்ளது. அரசின் இந்த முடிவுக்கு பொதுமக்களில் பெரும்பாலானவர்களும், அனைத்து அரசியல் கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன.லாட்டரிச் சீட்டு விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்கக் கோரி விற்பனையாளர்கள் பல்வேறு விதங்களில் கோரி வருகின்றனர். ஆனால் லாட்டரிச் சீட்டுக்கான தடையை நீக்கும் எண்ணம் இல்லை என்று முதல்வர் ஜெயலலிதா தெரிவித்து விட்டார்.
இந் நிலையில் வரும் தேர்தலில் தங்களது ஆதரவு யாருக்கு என்பதை லாட்டரிச் சீட்டு விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அகில இந்திய லாட்டரி வியாபாரிகள் சங்கத் தலைவர் உஸ்மான் பயஸ் செய்தியாளர்களிடம் பேசுகையில்,
தமிழகத்தில் மொத்தம் 6 லட்சம் லாட்டரிச் சீட்டு வியாபாரிகள் உள்ளனர். மொத்தம் 25 லட்சம் குடும்பத்தினர் உள்ளனர்.
கடந்த 3 ஆண்டுகளாக தடையை நீக்கக் கோரி பல ரூபங்களில் போராடிப் பார்த்து விட்டோடம். ஒரு பயனும் இல்லை.
லாட்டரித் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்கள் மிகவும் சாதாரணமானவர்கள். கண் தெரியாதவர்கள், கால் ஊனற்றவர்கள், வாய் பேச முடியாதவர்கள், படிக்காதவர்கள், ஏழை, எளியவர்கள்தான் இந்தத் தொழிலில் அதிகம் உள்ளனர்.
எனவே இதை கருத்தில் கொண்டு, இவர்களின் பரிதாப நிலையை மனதில் கொண்டு உடனடியாக தடையை நீக்கி உத்தரவிட வேண்டும். எங்களது நிலையை பரிசீலனை செய்து, லாட்டரிச் சீட்டு தடையை நீக்க எந்தக் கட்சி உறுதி அளிக்கிறதோ அந்தக் கட்சியை வரும் சட்டசபைத் தேர்தலில் ஆதரிக்க முடிவு செய்துள்ளோம்.
எங்களிடம் மொத்தம் 25 லட்சம் ஓட்டுக்கள் உள்ளன. எனவே இதை எடுத்துக் கூறி அனைத்துக் கட்சித் தலைவர்களையும் சந்திக்கவுள்ளோம். யார் எங்களை ஆதரிக்கிறார்களோ, அவர்களுக்கு எங்களது அனைத்து வாக்குகளையும் அப்படியே செலுத்துவோம் என உறுதியளிக்கிறோம் என்றார் பயஸ்.












Click it and Unblock the Notifications