நாமக்கல்லில் சிக்கன் மேளா!: பயம் போகுமா?
நாமக்கல்:
பறவைக் காய்ச்சல் பீதியை மக்களிடமிருந்து போக்கும் வகையில் நாமக்கல் நகரில் சிக்கன் மேளா நடத்தப்பட்டது.
மகாராஷ்டிர மாநிலத்தில் பறவைக் காய்ச்சல் பரவியுள்ளதைத் தொடர்ந்து தமிழகத்திலும் அந்த பீதி பரவியுள்ளது. ஆனால் தமிழகத்தில் பறவைக் காய்ச்சல் பரவவில்லை என்று அரசு அறிவித்துள்ள போதிலும், மக்கள் மனதில் பீதி போகவில்லை.இதன் காரணமாக கோழிக்கறி விற்பனை, முட்டை விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மக்கள் மனதில் நிலவும் பீதியை போக்குவதற்காக நாமக்கல்லில் சிக்கன் மேளா நடத்தப்பட்டது.
இதில், தமிழக அரசின் கால்நடைத்துறை இயக்குனர் பழனிவேலு, தமிழ்நாடு கோழிப் பண்ணையாளர் சங்கத் தலைவர் நல்லதம்பி, தேசிய முட்டை ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் டாக்டர் செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாமக்கல், எஸ்.பி.எஸ். திருமண மண்டபத்தில் இந்த சிக்கன் மேளா நடந்தது. 500 கிலோ கோழிக்கறியை பயன்படுத்தி சிக்கின் பிரியாணி, சில்லி சிக்கன், சிக்கன் 65 என ஏகப்பட்ட ஐட்டங்களைத் தயாரித்து விருந்துக்கு வைத்தனர்.
அதிகாரிகள், கோழிப் பண்ணையாளர்கள், சில தைரியமான பொதுமக்கள் இந்த விருந்தில் கலந்து கொண்டு சிக்கன் ஐட்டங்களை ஒரு பிடி பிடித்தனர்.
இதேபோன்ற விருந்துகளை தமிழகத்தில் மேலும் சில இடங்களிலும் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.