திருச்சி திமுக மாநாட்டுக்கு தடபுடல் ஏற்பாடுகள்
திருச்சி:
திருப்புமுனையைத் தரப் போகும் மாநாடு என திமுகவினரால் வர்ணிக்கப்படும் திருச்சி திமுக மாநல மாநாட்டுக்கான ஏற்பாடுகள் படு தடபுடலாக நடந்து வருகிறது.
திருச்சியில், மார்ச் 3ம் தேதி தல் 5ம் தேதி வரை திமுகவின் 9வது மாநில மாநாடு நடைபெறவுள்ளது. பல்வேறு வகையில் இந்த மாநாடு முக்கியத்துவம் பெற்றுள்ளது.சட்டசபைத் தேர்தல் வரும் நிலையில் நடைபெறும் மாநாடு என்பதால் இந்த மாநாட்டுக்கு கூடுதல் முக்கியத்துவம் கிடைத்துள்ளது.
கூட்டணியில் மதிமுக நீடிக்கிறது என்ற பெருத்த மகிழ்ச்சியுடன் திமுக இந்த மாநாட்டை நடத்துகிறது.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் மாநாட்டில் கலந்து கொள்கிறார். வைகோ உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்கள் கடைசி நாள் மாநாட்டில் கலந்து கொள்கின்றனர்.
இதில் திமுகவின் தேர்தல் அறிக்கை, கூட்டணிக் கட்சிகளின் தொகுதி எண்ணிக்கை ஆகியவை அறிவிக்கப்படவுள்ளதால்
திமுகவினர் தவிர கூட்டணிக் கட்சித் தொண்டர்களும் கூட மாநாட்டில் கலந்து கொள்ளும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.
திருச்சி விமான நிலையம் அருகே 120 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டுக்கான பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. மிகவும் பிரமாண்டமான வகையிலும், விரிவாகவும் ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
மாநாட்டுச் செலவுக்காக பல கோடிகளை பட்ஜெட்டில் ஒதுக்கியுள்ளதாம் கட்சித் தலைமை.
மாநாட்டு மேடை முழுக்க கிரானைட் கற்களால் அமைக்கப்பட்டுள்ளது. மேடையில் அமரும் தலைவர்களின் வசதிக்காக குளுகுளு வசதியும் செய்யப்பட்டுள்ளது.
மேடைக்குப் பின்புறம் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் வசதிக்காக குளுகுளு வசதியுடன் கூடிய எட்டு அறைகள் கட்டப்பட்டுள்ளன.
திருச்சி அரசினர் விருந்தினர் மாளிகையில் சோனியா காந்தி தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தவிர மாநாட்டுப் பந்தலில், ஆயிரம் மின் விசிறிகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
குடிநீர் வசதிக்காக ஆங்காங்கே ஆழ்குழாய் கிணறுகள் தோண்டப்பட்டு, டாய்லெட், பாத்ரரூம்களும் நூற்றுக்கணக்கில் கட்டப்பட்டுள்ளன.
உணவு உள்ளிட்ட சகல வசதிகளும் மாநாட்டு வளாகத்தில் செய்யப்பட்வுள்ளன.
பல லட்சம் பேர் வந்து குவியவுள்ளதால், தடங்கல் இல்லாத தகவல் தொடர்புக்காக தனியாக ஒரு செல்போன் கோபுரத்தையே நிர்மாணித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாநாட்டு ஏற்பாடுகளை திமுக தலைவர் கருணாநிதி ஒருமுறையும், ஸ்டாலின் இருமுறையும் பார்த்து விட்டுச் சென்றுள்ளனர். ஸ்டாலின் மீண்டும் ஒருமுறை வந்து பார்வையிடவுள்ளார்.
கே.என்.நேரு தலைமையிலான திமுகவினர் இரவு பகலாக மாநாட்டுப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications