ஒரு சீட்டுக்காக உதயமான மக்கள் கட்சி
சென்னை:
அதிமுகவின் உதவியுடன் முன்னாள் பாமக பிரமுகர் பேராசிரியர் தீரனின் மக்கள் கட்சி சென்னையில் உதயமானது.
பாமகவில் முக்கியப் பொறுப்பில் பல காலம் இருந்த பேராசிரியர் தீரன் பின்னர் அக்கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். அதன் பின்னர் தமிழ் பாமக என்ற பெயரில் தனிக்கட்சியை நடத்தி வந்தார். பின்னர் அந்தக் கட்சியும் செயலிழந்தது.கடந்த மக்களவைத் தேர்தலின்போது டாக்டர் ராமதாசுக்கு எதிராக நடிகர் ரஜினிகாந்தால் கொம்பு சீவி விடப்பட்ட வன்னிய சமூகத்தைச் சேர்ந்த தலைவர்களில் தீரனும் ஒருவர்.
ஆனால், ரஜினியோடு சேர்ந்து எல்லோரையும் புரட்டிப் போட்டார் ராமதாஸ். இதையடுத்து அரசியலுக்கு கும்பிடு போட்டுவிட்டு சினிமா பக்கமாகவே திரும்பப் போனார் ரஜினி.
ரஜினியை நம்பி அரசியல் களத்தில் முளைத்த வன்னிய அமைப்புகளும் அதன் தலைவர்களும் அப்படியே நட்டாற்றில் விடப்பட்டன. தீரன் உள்ளிட்ட இந்தத் தலைவர்கள் அட்ரசே இல்லாமல் இருந்தனர்.
இந் நலையில், தற்போது சட்டசபைத் தேர்தல் வருவதால் மீண்டும் வீறு கொண்டு எழுந்துள்ளார் தீரன். கட்சி ஆரம்பிக்குமாறு அதிமுக தரப்பில் இருந்து கூறப்பட்டதால மக்கள் கட்சி என்ற பெயரில் புதுக் கட்சி கண்டுள்ளார் தீரன்.
இக்கட்சியின் அறிமுக விழா(??) சென்னையில் நடந்தது.
கட்சியின் தலைவராக பேராசிரியர் தீரன், பொதுச் செயலாளர்களாக விஜயலட்சுமி, விஸ்வநாதன், துணைப் பொதுச் செயலாளராக வந்தவாசி ஆதம்பாஷா,
துணைத் தலைவராக பல்லவ மோகன், கொள்கை பரப்புச் செயலாளராக ந.வா. கணேசன், சுற்றுச்சூழல் அணித் தலைவராக வில்வநாத ரெட்டி ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.
பின்னர் கட்சிக் கொடியை தீரன் அறிமுகப்படுத்தினார். கட்சியின் முதல் தீர்மானமாக முதல்வர் ஜெயலலிதாவைப் பாராட்டி (அட்ரா சக்கை) ஒரு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இந்தக் கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கவுள்ளது. இந்தக் கட்சிக்கு மொத்தமே ஒரே ஒரு தொகுதி ஒதுக்கப்படலாம் எனத் தெரிகிறது.
அனேகமாக ஆண்டிமடம் தொகுதி ஒதுக்கப்படலாம், அதில் தீரன் போட்டியிடக் கூடும்.
சமீபத்தில் ரஜினியைச் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவாக வாய்ஸ் பெறச் சென்றார் தீரன். அவரை சந்தித்த ரஜினி ரசிகர் மன்றத் தலைவர் சத்யநாராயணா, தலைவர்கிட்ட சொல்றேன் என்று சொல்லி டீ கொடுத்து அனுப்பி வைத்துவிட்டார்.
இதுவரை தீரனை ரஜினி சந்திக்கவே இல்லை.












Click it and Unblock the Notifications