முல்லைப் பெரியாறு தீர்ப்பு: சபாஷ் சு.சுவாமி!
மதுரை:
முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழகத்திற்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகியுள்ளதற்கு முக்கியக் காரணகர்த்தா ஜனதாக் கட்சித் தலைவர் சுப்பிரமணியம் சுவாமிதான்.
அவர் தொடர்ந்த வழக்கில்தான் தற்போது தீர்ப்பு வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.தமிழக, கேரள எல்லையில, கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தின் எல்லைப் பகுதியில் உள்ள முல்லைப் பெரியாறு அணை. கடந்த 1897ம் ஆண்டு வெள்ளையர் ஆட்சியில் இந்த அணை கட்டப்பட்டது.
இதன் முழுக் கொள்ளளவு 152 அடியாகும். ஆனால் காலப் போக்கில் இதன் கொள்ளளவை 136 அடியாக கேரளா குறைத்துவிட்டது.
இதற்கு தமிழக அரசு எதிர்ப்பு தெரிவித்து வந்தது. அணையின் கொள்ளளவு மறுபடியும் 152 அடியாக உயர்த்தப்பட வேண்டும் என்று தமிழகம் கோரியது. ஆனால் அதை கேரளா ஏற்கவில்லை.
அப்படி உயர்த்தினால் தங்களது பகுதியில் பாதிப்பு ஏற்படும் என கேரளா காரணம் கூறியது.
இதுதொடர்பாக இரு மாநிலங்களும் சம்பந்தப்பட்ட மாநில உயர்நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்ந்தன. இந்த நிலையில்தான் 1998ம் ஆண்டு சுப்ரமணியம் சுவாமி ரூபத்தில் இந்தப் பிரச்சினையில் புதிய திருப்பம் ஏற்பட்டது.
1998ம் ஆண்டு மதுரை மக்களவைத் தேர்தலில் போட்டியிட்ட சுவாமி, தென் மாவட்ட மக்களின் 27 ஆண்டு கால பிரச்சினைக்கு (முல்லைப் பெரியாறு) தீர்வு காண நான் கண்டிப்பாக உதவுவேன். முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தென் மாவட்ட மக்களுக்கு நீதி பெற்றுத் தருவேன் என்று வாக்குறுதி அளித்தார்.
சொன்னதோடு நிற்காமல் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்தார். அதுதான் முல்லைப் பெரியாறு விவகாரம் தொடர்பாக தமிழகத்திலிருந்து தாக்கலான முதல் மனு என்பது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தமிழக அரசும் மனு தாக்கல் செய்தது.
இந்த இரண்டு மனுக்களும் சேர்த்தே விசாரிக்கப்பட்டு வந்தன.
தற்போது சுவாமி மற்றும் தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் தமிழக விவசாயிகளுக்கு சாதகமாக தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இந்தத் தீர்ப்பு குறித்து சுப்ரமணியம் சுவாமி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1998ம் ஆண்டு மார்ச் மாதம் நான் முதன் முதலில் உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டேன். அன்று முதல் இன்று வரை நான் எடுத்துக் கொண்ட முயற்சிகளுக்கு இப்போது பலன் கிடைத்துள்ளது.
இதன் மூலம் மதுரை மற்றும் தென் மாவட்ட மக்களுக்கு நான் அளித்த தேர்தல் வாக்குறுதியை இப்போது நிறைவேற்றி விட்டேன். இது மிகப் பெரும் மகிழ்ச்சியாக உள்ளது.
மக்களுக்கு சந்தோஷம் கிடைப்பதைப் பார்ப்பதுதான் ஒரு நல்ல அரசியல்வாதிக்கு உண்மையான திருப்தியாகும். அது எனக்கு இப்போது கிடைத்துள்ளது என்று கூறியுள்ளார் சுவாமி.
1998ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் அதிமுக ஆதரவோடு போட்டியிட்ட சுவாமி வெற்றி பெற்று எம்.பி ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
விவசாயிகள் மகிழ்ச்சி:
இதற்கிடையே உச்சநீதிமன்றம் தீர்ப்பு மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட விவசாயிகளிடையே பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.
குறிப்பாக தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் தான் அதிக சந்தோஷத்தை அடைந்துள்ளனர்.
கம்பம் பள்ளத்தாக்குப் பகுதியில் மட்டும் 20,000 ஏக்கர் அளவில் பயிரிடப்பட்டு பாசனம் நடந்து வருகிறது. மேலும், 15,000 ஹெக்டேர் அளவில் இரட்டை சாகுபடியும் நடந்து வருகிறது.
பேரணை முதல் கள்ளந்திரி வரையிலான பகுதியில் 45,000 ஏக்கர் நிலப்பரப்பில் பெரியாறு அணை நீரை நம்பி பாசனம் செய்யப்பட்டு வருகிறது. மொத்தமாக 2.16 லட்சம் ஏக்கர் நிலம் பெரியாறு பாசன வசதியைப் பெறுகிறது.
தேனி மாவட்டம் முதல் ராமநாதபுரம் மாவட்டம் வரையில் விவசாயிகள் அனைவரும் இனிப்புகள் வழங்கி உச்சநீதிமன்றத் தீர்ப்பை கொண்டாடினர்.
மேலும், பெரியாறு அணையை நிறுவிய ஆங்கிலேயரான பென்னி குக் நினைவாக, மதுரை மாவட்டம் மேலூரில் சிலை வைக்கவும் அப்பகுதி விவசாயிகள் முடிவு செய்துள்ளனர். ஏற்கனவே மதுரை பொதுப்பணித்துறை தலைமை அலுவலக வளாகதில் பென்னி குக்கிற்கு சிலை உள்ளது குறிப்பிடத்தக்கது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் மூலம் தென் மாவட்டங்களில் விவசாய புரட்சி ஏற்படக் கூடிய வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
கேரள அரசு தொடர்ந்து முரண்டு பிடிக்காத வகையில் தமிழக அரசு கிடுக்கிப் பிடி போட்டால்தான் உச்சநீதிமன்றத் தீர்ப்பை முறையாக அமல்படுத்தி தென் மாவட்டங்களை பசும் சோலைகளாக மாற்ற முடியும் என்று விவசாயிகள் கூறுகிறார்கள்.












Click it and Unblock the Notifications