சென்னையில் விரைவில் இன்னொரு என்கெளண்டர்?
சென்னை:
சென்னை நகரின் பிரபல ரவுடியான நாகேந்திரனை சுட்டுப் பிடிக்க மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனவே எந்த நேரத்திலும் சென்னையிலோ அல்லது சென்னைக்கு அருகிலோ ஒரு என்கவுண்டர் நடக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.சென்னை நகரை கடந்த 20 ஆண்டுகளாக கலக்கி வருபவன் ரவுடி நாகேந்திரன். ரவுடிகளின் தலைமையகமான சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவன்.
முக்கிய அரசியல் புள்ளிகளை கையில் போட்டுக் கொண்டு போலீஸாருக்கே பெரும் சவாலாக விளங்கியவன் நாகேந்திரன்.
ஒரு கொலை வழக்கில் கைதாகி ஆயுள் தண்டனை பெற்ற நாகேந்திரன், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டான்.
ஆண்டுக்கு ஒருமுறை பரோரில் வெளியே வந்து சென்னையில் குடும்பத்தினருடன் தங்கி விட்டு மீண்டும் சிறைக்கு சென்று விடுவான்.
கடந்த பிப்ரவரி 3ம் தேதி, தனது மனைவி உடல் நலம் இல்லாமல் இருப்பதாக கூறி பரோலுக்கு விண்ணப்பித்தான். இதையடுத்து ஒரு மாதம் பரோலில் அவன் விடுதலையானான்.
தினமும் மாதவரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட வேண்டும் என அவனுக்கு நிபந்தனை விதிக்கப்பட்டது. ஆனால் வெளியே வந்த நாகேந்திரன் அப்படியே தலைமறைவாகி விட்டான்.
இதையடுத்து போலீஸார் நாகேந்திரனைத் தேடத் தொடங்கினர். அப்போது ஒரு முக்கிய தகவல் போலீஸாருக்குக் கிடைத்தது.
மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என்று நாகேந்திரன் கூறியது பொய், அதற்காக அவன் மனைவி என்று கூறி மருத்துவ சான்றிதழை தாக்கல் செய்தது உண்மையான மனைவி அல்ல, செட்டப் செய்யப்பட்ட வேறு ஒரு பெண் என போலீஸாருக்குத் தெரிய வந்தது.
இதையடுத்து நாகேந்திரனை பிடிக்கும் முயற்சிகள் தீவிரமடைந்தன. அவன் முட்டுக்காடு பகுதியில் மறைந்திருப்பதாக வந்த தகவலைத் தொடர்ந்து போலீஸார் அங்கு விரைந்தனர். ஆனால் அதற்குள் அவன் தப்பி விட்டான்.
தற்போது ஆந்திராவுக்கு தப்பி ஓடி விட்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே நாகேந்திரனை எப்படியும் பிடித்து விட வேண்டும் என்றும், தேவைப்பட்டால் சுட்டும் பிடிக்குமாறு மாநகர காவல்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால் என்கெளண்டர் மூலம் நாகேந்திரன் தீர்த்துக் கட்டப்படும் வாய்ப்பும் எழுந்துள்ளது.












Click it and Unblock the Notifications