கார்த்திக்கையும் இழுத்தது அதிமுக?
சென்னை:
அதிமுக அணியில் சேருவதற்கான பூர்வாங்கப் பேச்சுவார்த்தைகள் முடிந்து விட்டதாக நடிகர் கார்த்திக் கூறியுள்ளார்.
தனது கட்சிக்கு 30 தொகுதிகளை கார்த்திக் கேட்டிருப்பதாகவும் தெரிகிறது.தமிழக பார்வர்ட் பிளாக்கட்சி யாருடன் கூட்டணி சேரும் என்பதில் இதுவரை தெளிவான தகவல் ஏதும் இல்லை. திமுக தலைவர் கருணாநிதியை கார்த்திக்கும், அகில இந்தியத் தலைவர் பிஸ்வாஸும் போய் பார்த்தனர்.
இதனால் திமுகவுடன் கார்த்திக் கூட்டணி வைக்கக் கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், பார்வர்ட் பிளாக்கில் உள்ள நிர்வாகிகளும் தொண்டர்களும் திமுக கூட்டணியை ஏற்கவில்லை.
அதிமுகவின் தீவிர ஆதரவாளர்களான இவர்கள் அதிமுக கூட்டணியிலேயே தொடரலாம் என்று கோரி வந்தனர்.
இதனால் அதிமுகவிடமிருந்து அழைப்புக்காகக் காத்திருந்தார் கார்த்திக். இந் நிலையில் அவரை சசிகலா தரப்பில் இருந்து முக்கியஸ்தர்கள் சந்தித்துப் பேசியதையடுத்து கூட்டணிக்கு ஒப்புக் கொண்டுவிட்டார்.
இதையடுத்து கடந்த இரு நாட்களில் மடமடவென திரைமறைவில் பேச்சுவார்த்தைகள் நடந்து முடிந்துவிட்டன.
இது குறித்து கார்த்திக் கூறுகையில்,
உசிலம்பட்டியில் மட்டுமே போட்டியிடக் கூடிய கட்சியாக இத்தனை காலம் பார்வர்ட் பிளாக் கட்சி கருதப்பட்டு வந்தது. அதை நான் மாற்றப் போகிறேன்.
தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் பார்வர்ட் பிளாக் கட்சியின் தொண்டர்களும், முக்குலத்தோர் இளைஞர்களும் புத்தெழுச்சியுடன் கிளம்பியுள்ளனர்.
கட்சி நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது. மொத்தமாக 15 மாவட்டங்களில் பார்வர்ட் பிளாக் கட்சிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது. எனது தலைமையில் கட்சி தற்போது நல்ல பலம் பெற்றுள்ளது.
அதிமுகவுடன் கூட்டணி சேர வேண்டும் என்பதே கட்சியினரின் கருத்தாக உள்ளது. இதுதொடர்பாக அதிமுகவுடன் பூர்வாங்கப் பேச்சுக்கள் முடிந்துள்ளன. தொடர்ந்து பேசுவோம்.
எங்களுக்கு 30 தொகுதிகளில் வெற்றி வாய்ப்பு உள்ளது. இதை அதிமுகவிடம் தெரிவித்துள்ளோம். கிடைக்கும் என்று நம்புகிறோம்.
தமிழகத்தைத் தவிர புதுவை, கேரளா மாநலங்களிலும் பார்வர்ட் பிளாக் கட்சி நல்ல கட்டமைப்புடன் உள்ளது. அங்கும் கட்சியை வலுப்படுத்துவேன்.
வரும் 12 ம் தேதி திருநெல்வேலியில் கட்சியின் மாநில மாநாடு நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகள் துரிதகதியில் நடந்து வருகின்றன என்றார் கார்த்திக்.
கார்த்திக்கால் கட்சியை விட்டு நீக்கப்பட்ட அதிமுகவின் தீவிர ஆதரவாளரான சந்தானத்துக்கும் ஒரு தொகுதியைத் தந்து அவரது வாயை கார்த்திக் மூடுவார் என்று தெரிகிறது.
கார்த்திக்கோடு விஜயகாந்த்தை கூட்டணியில் இழுக்க அதிமுக திரைமறைவில் தீவிரமாக முயன்று வருகிறது.
ஏற்கனவே தாழ்த்தப்பட்ட மக்களின் தனிப் பெரும் தலைவர்களில் ஒருவராக திகழும் திருமாவளவன் ஏற்கனவே கூட்டணிக்கு வந்து விட்டார்.
வைகோவுக்கும் தொடர்ந்து வலை வீசப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications