அரசு நிகழ்ச்சிகள் ரத்து-சலுகைகளும் ஸ்டாப்!
சென்னை:
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளதால், நேற்று மாலை முதல் நடைபெறுவதாக இருந்த அனைத்து மாநில மற்றும் மத்திய அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
தமிழக சட்டசபைக்கு மே 8ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அறிவிப்பு நேற்று மாலையில் டெல்லியில் வெளியிடப்பட்டது.தேதி அறிவிக்கப்பட்ட நிமிடத்திலிருந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வருவதாக தலைமைத் தேர்தல் ஆணையர் பி.பி.டாண்டன் அறிவித்தார்.
தேர்தல் நடத்தை விதிமுறையின் கீழ் அரசு விழாக்களை நடத்த முடியாது. எனவே, ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில், பாரதியார், பாரதிதாசன், திருவிக, கி.ஆ.பெ. விஸ்வநாதன் விருது வழங்கும் விழா நடைபெறுவதாக இருந்தது. அமைச்சர்கள் ஓ.பன்னீர் செல்வம், சி.வி.சண்முகம், அன்பழகன் ஆகியோர் இதில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால் இந்த விழா தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதேபோல திண்டிவனம்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையை 4 வழிப் பாதையாக மாற்றுவது உள்ளிட்ட சில பணிகளுக்கு இன்று அடிக்கல் நாட்டுவதாக இருந்தது. அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் நடக்கவிருந்த இந்த மத்திய அரசின் இந்த விழாவும் ரத்து செய்யப்பட்டு விட்டது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் இரவு, பகலாக, தினந்தோறும் ஏதாவது ஒரு சலுகை-அறிவிப்பை வெளியிட்டு வந்தார் முதல்வர் ஜெயலலிதா. இனி அதுவும் முடியாது.