சிறுசேரி: இன்னொரு டான்சி தவிர்ப்பு!
சென்னை:
சென்னை அருகே சிறுசேரியில் சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் உள்ள 103 ஏக்கர் நிலத்தை சிங்கப்பூர் ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு விற்றதை ரத்து செய்து விட்டதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. இதைத் தொடர்ந்து திமுக தொடர்ந்த வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ளது.
சென்னை அருகே சிறுசேரி சிப்காட் தொழிற்பேட்டை வளாகத்தில் வணிக நோக்கத்திற்காக ஒதுக்கப்பட்ட 103 ஏக்கர் நிலத்தை சிங்கப்பூரைச் சேர்ந்த ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு தமிழக அரசு விற்றது.ஒரு ஏக்கர் நிலம் ரூ. 2 கோடி வரை விலை போகக் கூடிய இந்த இடத்தை, ஏக்கருக்கு வெறும் ரூ. 15 லட்சத்திற்கு மட்டுமே தமிழக அரசு சிங்கப்பூர் நிறுவனத்திற்கு விற்றது.
அடிமாட்டு விலைக்கு விற்கப்பட்டதில் அரசுக்கு ரூ. 191 கோடி அளவுக்கு நஷ்டம் ஏற்பட்டது. ஆனால், இந்த நில பேரத்தில் ஆளும் தரப்புக்கு ரூ. 125 கோடி கைமாறியுள்ளதாகவும் திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியிருந்தார்.
இந் நிலையில், சிப்காட் நில விற்பனையை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக பொருளாளர் ஆற்காடு வீராசாமி வழக்கு தொடர்ந்தார். சிபிஐ விசாரணைக்கு இதை விட வேண்டும் என்று அவர் தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று தலைமை நீதிபதி ஏ.பி.ஷா, நீதிபதி சுகுணா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் சோமையாஜி ஆஜராகி, சிப்காட் நில விற்பனை ஒப்பந்தத்தை தமிழக அரசு ரத்து செய்து விட்டது என்று நீதிபதிகளிடம் தெரிவித்தார்.
இதையடுத்து திமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர் சண்முக சுந்தரம், இந்த வழக்கே, சிறுசேரி நில விற்பனை ஒப்பந்தம் குறித்துத்தான். அந்த ஒப்பந்தமே ரத்து செய்யப்படுவதால், வழக்கும் தேவையில்லை. எனவே நாங்கள் வழக்கை வாபஸ் பெற்றுக் கொள்கிறோம் என்று தெரிவித்தார்.
(டான்சி வழக்கில் முதல்வர் ஜெயலலிதா, சசிகலாவுக்கு எதிராக டாகுமெண்ட் தயாரித்துக் கொண்டிருந்த இதே சண்முகசுந்தரத்தை ரெளடிகளை அனுப்பி பதம் பார்த்தார்கள் என்பது நினைவுகூறத்தக்கது. அதில் சண்முகசுந்தரத்தின் விரல்கள் எல்லாம் துண்டாகிப் போயின. மண்டையெல்லாம் பிளந்து போனது)
இதைத் தொடர்ந்து வழக்கை பைசல் செய்வதாக அறிவித்த தலைமை நீதிபதி, விற்பனையை தமிழக அ ரசு ரத்து செய்துள்ளதை எதிர்த்து முறையிட சிங்கப்பூர் நிறுவனம் விரும்பினால் உரிய நீதிமன்றத்தை அணுகலாம் என்று அனுமதி அளித்தார்.
இந்த வழக்கு விசாரணைக்கு வரும் முன் திமுக தலைவர் கருணாநிதி ஒரு அறிக்கை வெளியிட்டிருந்தார். அதில்,
சிறுசேரி நில விற்பனையை ரத்து செய்து விட்டது தமிழக அரசு. இதுதொடர்பாக அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுத்து விட்டார்கள். ஊழல் வெளிச்சமாகி விடும் என்ற பயத்தால்தான் இந்த முடிவை எடுத்துள்ளார் ஜெயலலிதா.
இந்த பேரத்தில் வாங்கப்பட்ட ரூ. 125 கோடியையும் சிங்கப்பூர் நிறுவனத்திடம் திருப்பித் தருவதாக உத்தரவாதம் கொடுத்துள்ளார்கள் என்று கூறியிருந்தது நினைவிருக்கலாம்.
இது இன்னொரு டான்சி வழக்கு என்று கூறப்பட்ட நிலையில், நிலத்தை விற்றதை தமிழக அரசு ரத்து செய்துவிட்டது குறிப்பிடத்தக்கது. இந்த ரத்து மூலமாக நில விற்பனையில் முறைகேடு நடந்துள்ளது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாக திமுக தரப்பு கூறுகிறது.