தேர்தல்: அதிரடி வேகத்தில் அதிமுக...
சென்னை:
சட்டசபைத் தேர்தல் பணிகளில் அதிமுக படு வேகமாக இறங்கியுள்ளதைக் கண்டு திமுக தரப்பு திகைப்பில் ஆழ்ந்துள்ளது.
மே 8!... தமிழகத்தின் அடுத்த ஆட்சியாளரை நிர்ணயிக்கப் போகும் நாள். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டு விட்டதால் அத்தனை அரசியல் கட்சிகளையும் தேர்தல் ஜூரம் கடுமையாகத் தாக்கியுள்ளது.தேர்தல் உத்திகளை வகுப்பது, வேட்பாளர்கள் தேர்வு, பிரசார உத்திகளை முடிவு செய்வது , கூட்டணி அமைப்பது என கட்சிகள் பிசியாகி உள்ளன.
திமகவைப் பொருத்தவரை இன்னும் தொகுதிப் பங்கீடு முடியவில்லை. கூட்டணிக் கட்சிகளின் இழுப்புக்கெல்லாம் மிகப் பொறுமையாக வளைந்து கொடுத்து சென்று கொண்டிருக்கிறார் திமுக தலைவர் கருணாநிதி.
அதேசமயம், அதிமுக தரப்போ பெரிய கட்சிகளுக்கு ஒரு பக்கம் வலை வீசிக் கொண்டே, படு சுறுசுறுப்பாக தேர்தல் வேலைகளில் இறங்கி விட்டது.
முதல் கட்டமாக ஒவ்வொரு தொகுதியிலும் (மொத்தம் 234 தொகுதிகள்) பூத் கமிட்டி அமைக்கப்பட்டு அவர்கள் அளவிலிருந்து தேர்தல் பணிகளைத் தொடங்கியுளளது அதிமுக.
சாதாரண குக்கிராம அளவிலிருந்து மாவட்ட செயலாளர் வரை யாருக்கு என்ன பணிகள் என்பதை ஏற்கனவே தெளிவாக வகுத்து கொடுத்து விட்டார்கள்.
முதல் கட்டமாக பூத் கமிட்டிகளுக்கு நிதியும் போய்ச் சேர்ந்துவிட்டது.
பஞ்சாயத்து அளவிலிருந்து மாவட்டம் வரையில், எப்படி பிரசாரம் செய்ய வேண்டும், அரசின் எந்த சாதனைகளை முதன்மைப்படுத்திப் பேச வேண்டும் என்று தெள்ளத் தெளிவாக கூறப்பட்டு விட்டதாம்.
பிரசாரம் தொடர்பான எந்த சந்தேகம், பிரச்சினை என்றாலும் உடனடியாக அணுகுவதற்கு மாவட்டச் செயலாளர்கள் தயாராக இருக்க வேண்டும் என்றும், பணம் ஒரு பிரச்சனையாகவே இருக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
கட்சியினரை தட்டிக் கொடுத்து, வேண்டியதைச் செய்து கொடுத்து, உற்சாகப்படுத்தி வேலை வாங்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அதற்குத் தேவையான அளவுக்கு காந்தி தாத்தாக்களும் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டனர்!.
மார்ச் 7ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியாகிறது. அதன் பின்னர் பிரசாரத்தை முழு வீச்சில் களமிறக்க அதிமுக தரப்பு முடிவு செய்துள்ளது.
அதற்கு முன்பு கிரவுண்ட் அளவில் அத்தனைப் பணிகளையும் முடித்து விட வேண்டும் என்று அதிமுக தலைமை கட்சியினருக்கு உத்தரவிட்ள்ளது.
அதிமுக அமைத்துள்ள பூத் கமிட்டிதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படும் விஷயமாக மாறியுள்ளது. அந்த அளவுக்கு மிகவும் பக்காவாக கமிட்டிகளை அமைத்துள்ளார்களாம்.
தமிழகம் முழுவதும் மொத்தம் 50,000 பூத் கமிட்டிகளை அமைத்துள்ளது அதிமுக. இவர்கள் அனைவரும் போருக்காக காத்துக் கொண்டிருக்கும் போர் வீரர்களைப் போல படு உற்சாகமாக, தயார் நிலையில் உள்ளனராம்.
அதில் இடம்பெற்றுள்ள அத்தனை பேருக்கும் நல்ல சம்பளமும், சாப்பாடும் கொடுத்து தட்டிக் கொடுத்து வேலை வாங்குகிறார்கள்.
திமுகவில் எப்போதுமே காசு பஞ்சம் உண்டு. தலைவரு பெட்டிய தெறக்கவே மாட்டாரு என்று புலம்பிக் கொண்டே கைக் காசைப் போட்டு தேர்தல் வேலை பார்ப்பவர்கள் திமுக தொண்டர்கள்.
ஆனால், இப்போது அவர்களும் மாறிவிட்டனர். துட்ட வெட்டுனா வேலை, இல்லாட்டி ஓட்டு போடுவதோடு ஒதுங்கிவிடுவோம் என்று கூற ஆரம்பித்துவிட்டனர்.
இதனால் இந்தமுறை திமுகவிலும் பச்சை நோட்டுகள் களமிறங்கப் போகின்றன.
மறுபக்கம், சீட் கேட்டு வந்துள்ள 12,000 விண்ணப்பங்களையும் மாவட்ட வாரியாகப் பிரித்து, பரிசீலித்து அம்மாவின் பார்வைக்குக் கொண்டு செல்லும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.
இதுதவிர, தற்போதைய எம்.எல்.ஏக்கள், அமைச்சர்களுக்கு தொகுதியில் உள்ள பெயர், அவர்களது சாதனைகள், புதிதாக சீட் கேட்டு விண்ணப்பித்துள்ளவர்களின் பின்னணி உள்ளிட்ட புள்ளி விவரங்களும் உளவுத்துறை மூலம் கலெக்ட் செய்யப்பட்டு அம்மாவின் பார்வைக்கு வைக்கப்பட்டுவிட்டது.
இதுவரை இல்லாத அளவுக்கு வேட்பாளர் தேர்வில் ஜெயலலிதா மிகுந்த கவனம் செலுத்துவதாக கூறப்படுகிறது.
எந்தவித குறையும் கூற முடியாத அளவுக்கு வேட்பாளர்களை நிறுத்த அவர் திட்டமிட்டுள்ளார். பல புதுமுகங்களுக்கு சீட் கிடைக்கும் வாய்ப்பு பிரகாசமாக உள்ளதாம்.
கும்மிடிப்பூண்டி-காஞ்சிபுரம் இடைத் தேர்தல் ஸ்டைலில் தேர்தலை சந்தித்தால், வெற்றி உறுதி என நம்பும் ஜெயலலிதா தொகுதிவாரியாக உள்ள சமூக, ஜாதித் தலைவர்களை சந்தித்துப் பேசி அவர்கள் மூலமாக வாக்குகளை லம்ப் ஆக அள்ளும் பணியில் அதிமுகவினரை இறக்கிவிட்டுள்ளார்.
இந்தத் தலைவர்கள் கேட்கும் வசதிகள் அனைத்தும் தட்டாமல் செய்து தரப்பட வேண்டும் என்று உத்தரவிடப்பட்டிருக்கிறது.
இதற்கிடையே, ஜெயலலிதாவின் பிரசாரத் திட்டத்தை இறுதி செய்யும் வேலையில், கே.ஏ.செங்கோட்டையன் தீவிரமாக உள்ளார். 3 கட்டமாக ஜெயலலிதா பிரசாரம் செய்யவுள்ளதாகத் தெரிகிறது
மொத்தத்தில், மற்ற கட்சிகளைத் தூக்கி சாப்பிடும் அளவுக்கு அதிமுகவின் ஆரம்ப கட்டப் பணிகள் அசத்தலாக உள்ளன.
திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் சட்டுப்புட்டென்று தொகுதிப் பங்கீட்டை முடித்து, பிரசாரத் திட்டத்தை வகுத்தால்தான் அதிமுகவின் வேகத்தை சமாளிக்க முடியும் என்பதே இப்போதைய லேட்டஸ்ட் கிரவுண்ட் சிசுவேசன் .












Click it and Unblock the Notifications