நடராஜன் உதவியுடன் கார்த்திக்-சந்தானம் சமரசம்
மதுரை:
தமிழக பார்வர்ட் பிளாக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் சந்தானத்துடன் இன்று மதுரையில் நடிகர் கார்த்திக் சமரசப் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
அதிமுக தரப்பின் தலையீட்டையடுத்து இந்த சமரச பேச்சு நடக்கிறது.நடிகர் கார்த்திக்கைத் தலைவராகக் கொண்ட தமிழக பார்வர்ட் பிளாக் கட்சி அதிமுகவுடன் கூட்டணி சேரமுடிவு செய்துள்ளது. ஆனால் அதிமுகவிடமிருந்து முறையான அழைப்பு வரவில்லை.
இதற்கு முக்கியக் காரணமாக கூறப்படுவது, தங்களின் தீவிர விசுவாசியாக இருந்து வந்த சந்தானம் எம்.எல்.ஏ. இல்லாத பார்வர்ட் பிளாக் கட்சியுடன் கூட்டணி அமைக்க அதிமுக தயாராக இல்லாததுதான்.
சந்தானம் மீண்டும் பார்வர்ட் பிளாக் கட்சியில்சேர்க்கப்பட்டு முக்கியப் பொறுப்பு கொடுக்கப்பட்டால்தான் கூட்டணி குறித்து யோசிக்க முடியும் என்று அதிமுக தரப்பிலிருந்து கார்த்திக்குக்கு தகவல் போயுள்ளது.
தனித்துப் போட்டியிட்டால் தேற முடியாது, முக்குலத்தோர் கட்சியான பார்வர்ட் பிளாக் தொண்டர்கள் திமுகவுடன் கைகோர்க்கத் தயாராக இல்லை.
இதனால் அதிமுகவை விட்டால் வேறு வழியில்லை என்ற நிலையில், சந்தானத்துடன் சமரசமாகப் போய் விட முடிவு செய்துவிட்டார்.
சசிகலாவின் கணவர் நடராஜனும் கார்த்திக்கைத் தொடர்பு கொண்டு சந்தானத்தை சந்திக்க ஏற்பாடு செய்கிறேன், பேசுங்கள், பிரச்சினை தீர்ந்து விடும் என்று கூறியுள்ளார்.
இதை ஏற்றுக் கொண்ட கார்த்திக், சந்தானத்தை சந்திக்க ஏற்பாடு செய்யுங்கள் என்று கூறி விட்டார்.
இதையடுத்து மதுரையில் இன்று சமரசப் பேச்சுக்கு ஏற்பாடு செய்துள்ளார் நடராஜன். திண்டுக்கல்லில் ஒரு கல்யாண நிகழ்ச்சியில் கார்த்திக்கும், நடராஜனும் கலந்து கொள்கின்றனர்.
அது முடிந்தவுடன் இருவரும் மதுரைக்கு வருகிறார்கள். அங்கு சந்தானத்துடன் கார்த்திக் பேசுகிறார்.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் சந்தானத்தை மீண்டும் கட்சியில் சேர்க்க கார்த்திக் நடவடிக்கை எடுப்பார் எனத் தெரிகிறது.
அதையடுத்து சந்தானம் மூலமே ஜெயலலிதாவை சந்தித்து அதிமுகவுடன் கூட்டணி அமைப்பார் கார்த்திக் என்று கூறப்படுகிறது.
கார்த்திக்கின் இந்த நிலைக்கு அவருடன் இருக்கும் சிலரே காரணம் என கார்த்திக் ஆதரவாளர்கள் புலம்புகிறார்கள். தப்புத் தப்பான யோசனைகளைக் கூறி கார்த்திக்கை அவர்கள் குழப்புகிறார்கள்.
இல்லாவிட்டால் திருமாவளவனுக்கு முன்பாகவே கார்த்திக் அதிமுக கூட்டணியில் சேர்ந்து கூடுதல் இடங்களைப் பெற்றிருப்பார் என அவர்கள் ஆதங்கம் தெரிவிக்கிறார்கள்.