ஜெ. தமிழர்களுக்கு எதிரானவர் அல்ல: திருமா
கடலூர்:
அரசியல் நடத்துவதில் தான் கெட்டிக்காரர் என்பதை முதல்வர் ஜெயலலிதா ஆணித்தரமாக நிரூபித்துள்ளார் என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.கடலூர் மாவட்டம் திட்டக்குடியில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நானும், வைகோவும் அதிமுகவுடன் கூட்டணி அமைத்துள்ளதன் மூலம் இக்கூட்டணி வலுவடைந்துள்ளது. புதுவையிலும் நாங்கள் அதிமுக கூட்டணியில் இடம் பெற்று, 2 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது மன நிறைவைத் தருகிறது.
வைகோவை கூட்டணியில் சேர்த்ததன் மூலம், அரசியல் நடத்துவதில் தான் கெட்டிக்காரர் என்பதை ஜெயலலிதா மீண்டும் நிரூபித்து விட்டார். அவரது அரசியல் சாதுரியம் இதன் மூலம் வெளிப்பட்டுள்ளது. கூட்டணி அமைப்பதில் அவர் செய்துள்ளது மிகப் பெரிய சாதனை.
தமிழர் நலனுக்கு விரோதமானவர் என்ற எண்ணத்தையும் ஜெயலலிதா துடைத்து எறிந்துள்ளார். விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக போன்ற தமிழர் நலன், உரிமைக்காக குரல் கொடுக்கும் கட்சிகளை அதிமுகவுடன் கூட்டணி சேர்த்துள்ளதன் மூலம், தான் தமிழர்களுக்கு எதிரானவர் அல்ல என்பதை நிரூபித்துள்ளார் என்றார் திருமாவளவன்.