இருக்குமா இ.கம்யூ?-இன்று முக்கிய ஆலோசனை
சென்னை:
திமுக கூட்டணியில் கொடுக்கப்பட்டுள்ள குறைந்த தொகுதிகளால் அதிருப்தி அடைந்துள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகக் குழுக் கூட்டம் இன்று நடக்கிறது.
இக்கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்படவுள்ளதாகத் தெரிகிறது.திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்குத்தான் முதலில் தொகுதிப் பங்கீடு முடிவடைந்தது. அக்கட்சிக்கு 10 தொகுதிகளை ஒதுக்கியது திமுக.
ஆனால் அதன் பிறகு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 13 தொகுதிகளை ஒதுக்கியது.
இதனால் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அதிருப்தி அடைந்துள்ளது. ஆரம்பத்தில் இருந்தே திமுக கூட்டணி வேண்டாம், அதிமுக பக்கம் போகலாம் என்று கூறி வந்த மாநிலச் செயலாளர் தா.பாண்டியன் தரப்பினருக்கு, திமுகவுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க இது நல்ல சாக்காக அமைந்துவிட்டது.
நம்மைவிட மார்க்சிஸ்ட் கட்சிக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கி நாம் சிறிய கட்சி என்ற தோற்றத்தை கருணாநிதி ஏற்படுத்தி விட்டார் எனக் கூறுகிறது தா.பாண்டியன் தரப்பு.
இந்தக் கட்சியை அதிமுகவுக்கு இழுக்க தா.பாண்டியன் சார்ந்த சமூகத்தைச் சேர்ந்த சசிகலாவும் தீவிரமாக முயன்று வருகிறார்.
ஆனால், நல்லகண்ணு தான் அதிமுக கூட்டணி கூடவே கூடாது என்பதில் மிகத் தீவிரமாக உள்ளார். ஆனாலும் குறைந்த தொகுதிகள் ஒதுக்கப்பட்டதில் நல்லகண்ணுவுக்கும் கோபம் தான்.
இந் நிலையில் தங்களது அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கட்சியின் தா.பாண்டியன், நல்லகண்ணு உள்ளிட்டோர் கட்சி முன்னணியினருடன் கடந்த சில தினங்களாக பேசி வருகிறார்கள்.
பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த கட்சியின் அகில இந்தியச் செயலாளர் ராஜா சென்னை வந்து கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் டெல்லி போய் விட்டார்.
இந் நிலையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை சமாதான்படுத்த ராஜாவுக்கு ராஜ்யசபா எம்பி பதவி தருவதாகவும் திமுக தரப்பு உறுதி தந்துள்ளது.
இதற்கிடையே கட்சியின் நிர்வாகக் குழு அவசரமாக இன்று கூட்டப்பட்டுள்ளது.
இது குறித்து தா.பாண்டியன் கூறுகையில், கட்சியின் தலைமை அலுவலகத்தில் நிர்வாகக் குழுக் கூட்டம் நடைபெறுகிறது. ஒரு நூல் வெளியீட்டு விழாவுக்காகத்தான் ராஜா சென்னை வந்தார்.
பிரச்சினை இருக்கிறதா, தீர்ந்து விட்டதா என்பது பற்றியெல்லாம் இப்போது ஒன்றும் சொல்ல முடியாது என்றார்.
இன்றைய கூட்டத்தில் கூடுதல் தொகுதிகளை கேட்பது, அல்லது 10 தொகுதிகளையும் வெற்றி பெறும் தொகுதிகளாக, அதாவது தாங்கள் கேட்கும் தொகுதிகளையே தர வேண்டும் என திமுகவை வலியுறுத்துவது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முடிவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதற்கு திமுக உடன்படாவிட்டால் வேறு மாதிரியான முடிவை அக் கட்சி எடுக்கக் கூடும்.