ஒட்டப்பிடாரத்தில் டாக்டர் கிருஷ்ணசாமி போட்டி
நெல்லை:
எந்தக் கூட்டணியிலும் சேர்க்காததால் புதிய தமிழகம் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி ஒட்டப்பிடாரம்தொகுதியில் தனித்துப் போட்டியிட முடிவு செய்துள்ளார்.
உ.பி முன்னாள் முதல்வர் மாயாவதியின் பகுஜன் சமாஜ் கட்சியின் சின்னமான யானை சின்னத்தில் போட்டியிடமுடிவு செய்தார் கிருஷ்ணசாமி. இது தொடர்பாக அவர்களுடன் பேச, சின்னத்தை பயன்படுத்தும் முன் உங்கள்கட்சியை பகுஜன் சமாஜில் இணைத்துவிடுங்கள் என்று பதில் வந்தது.இதற்கு டாக்டரும் ரெடியானார். ஆனால், கட்சியின் நிர்வாகிகளில் பெரும்பாலானவர்கள் அதை ஏற்கமறுத்துவிட்டனர். இதனால் கட்சியை இணைக்கும் திட்டத்தை இப்போதைக்கு ஒத்தி வைத்துவிட்டு திமுக,அதிமுக கூட்டணியில் ஏதேனும் ஒன்றில் இடம் பிடிக்க முயன்றார்.
ஆனால், அதிமுகவில் திருமாவளவன் சேர்ந்துவிட்டதால் டாக்டருக்கு அங்கு வாய்ப்பில்லாமல் போய்விட்டது.திமுகவும் கண்டுகொள்ளவில்லை.
இந் நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் மீண்டும் தனித்துப் போட்டியிட கிருஷ்ணசாமி முடிவுசெய்துள்ளார். 1995ம் ஆண்டில் ஒட்டப்பிடாரத்திலும் கொடியங்குளத்திலும் தலித்துகளுக்கு எதிரான மிகப்பெரிய ஜாதிக் கலவரம் நடந்தபோது, தலித்துகளுக்காக குரல் கொடுத்தவர் கிருஷ்ணசாமி.
புதிய தமிழகம் கட்சியை ஆரம்பித்த அவர் ஒட்டப்பிடாரத்தில் 1996ம் ஆண்டு தனியாகப் போட்டியிட்டு திமுக,அதிமுகவை வென்றார்.
2001ம் ஆண்டு தேர்தலில் திமுகவுடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட கிருஷ்ணசாமி வெறும் 630வாக்குகள் வித்தியாசத்தில் தான் ஒட்டப்பிடாரத்தில் தோல்வியடைந்தார்.
இந் நிலையில் மீண்டும் இங்கு போட்டியிட முடிவு செய்துவிட்ட கிருஷ்ணசாமி வரும் 16ம் தேதி ஒட்டப்பிடாரம்சென்று பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.