For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இலங்கை: தமிழர் பகுதிகளில் சரமாரி குண்டு வீச்சு

By Staff
Google Oneindia Tamil News

கொழும்பு:

இலங்கையில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழர் கிராமங்களில் விமானப்படை விமானங்கள் சரமாரியாக குண்டு வீசித் தாக்குதல் நடத்தியுள்ளன.

இலங்கை அரசுக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே ஜெனீவாவில் வருகிற 28, 29 ஆகிய தேதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

ஆனால் இரு தரப்பினரும் கடந்த சில நாட்களாக கடுமையான மோதலை மேற்கொண்டுள்ளனர். முகமாலை, நாகர்கோவில், கிலாலி உள்ளிட்ட பகுதிகளில் விடுதலைப் புலிகள் வசம் உள்ள பகுதிகளை குறி வைத்து ராணுவம் தாக்குதல் நடத்தி வருகிறது.

இந்த நிலையில், இப்பகுதிகளில் இன்று காலை சுமார் 2 மணிநேரத்திற்கும் மேலாக இலங்கை போர் விமானங்கள் குண்டுகளை வீசி சரமாரி தாக்குதலில் ஈடுபட்டன.மொத்தம் 48 குண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பல வீடுகள் சேதமடைந்தன. இருப்பினும் உயிர்ச் சேதம் ஏதும் இல்லை என்று கூறப்படுகிறது. ஆனால் 3 தமிழர்கள் ராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்த குண்டு வீச்சில் 10க்கும் மேற்பட்ட மாடுகள் பலியாகியுள்ளன. விவசாய பண்ணைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.

விடுதலைப் புலிகளின் படகு தகர்ப்பு:

இதற்கிடையே, மன்னார் வளைகுடாவில் ஆயுதங்களுடன் வந்து கொண்டிருந்த விடுதலைப் புலிகளின் படகை தாக்கி அழித்து விட்டதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், மன்னார் வளைகுடா பகுதியில், கடற்படையின் 2 தாக்குதல் படகுகள் ரோந்து சுற்றிக் கொண்டிருந்தன.அப்போது இரண்டு படகுகள் இலங்கை நாட்டு கொடியுடன் வேகமாக வந்து கொண்டிருந்தன. அதில் ஒரு படகு இந்தியாவைச் சேர்ந்தது, இன்னொரு படகு இலங்கையைச் சேர்ந்தது.

அந்த இரு படகுகளையும் நிற்குமாறு கடற்படையினர் உத்தரவிட்டனர். அதற்கு இலங்கை படகு உடனடியாக ஒத்துக் கொண்டு நின்றது. ஆனால் இந்திய படகு வேகமாக செல்ல ஆரம்பித்தது.

இதையடுத்து எச்சரிக்கும் வகையில் வானத்தை நோக்கி கடற்படை வீரர்கள் சில முறை சுட்டனர். ஆனால் படகு நிற்காமல் வேகமாக செல்ல ஆரம்பித்தது. மேலும், கடற்படையை நோக்கி அந்தப் படகில் இருந்தவர்கள் திருப்பிச் சுட்டனர்.

இதையடுத்து அந்தப் படகை நோக்கி கடற்படை வீரர்கள் சரமாரியாக சுட்டனர். இதில் அந்தப் படகு தகர்க்கப்பட்டது. படகில் இருந்த 4 பேரும் உயிரிழந்தனர். படகு கடலில் மூழ்கி விட்டது.

அந்த படகு விடுதலைப் புலிகளின் படகாக இருக்கக் கூடும் என சந்தேகிக்கிறோம். மேலும் படகில் ஏராளமான ஆயுதங்களும் இருந்திருக்கக் கூடும் எனவும் சந்தேகிக்கப்படுகிறது என்றார் அந்த அதிகாரி.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X