ஜெயலலிதாவின் நாக்குக் குழறல்: கருணாநிதி
சென்னை:மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் நியாயமாக நடந்ததாக முன்பும், தேர்தல் முடிவுக்குப் பின்னர்முறைகேடு நடந்து விட்டதாக ஜெயலலிதா கூறியிருப்பது அவருக்கு ஏற்பட்ட நாக்குக் குழறல் என்று எடுத்துக்கொள்ளலாம் என்று முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக கருணாநிதியிடம் கேட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதிலில், தலைமைத் தேர்தல்ஆணையத்தின் நேரடிக் கண்காணிப்பில் மதுரை மத்திய தொகுதி இடைத் தேர்தல் நடப்பதால் தேர்தல் நியாயமாகநடப்பதாக முன்பு ஜெயலலிதா கூறியிருந்தார். ஆனால் தேர்தல் முடிவுக்குப் பின்னர் முறைகேடு நடந்துவிட்டதாக கூறியுள்ளார்.
முன்பு ஒருமுறை சட்டசபையில் ஜெயலலிதா பேசுகையில் தனக்கு நாக்குக் குழறல் ஏற்படும் எனதெரிவித்திருந்தார். எனவே இப்போதும் அவருக்கு நாக்குக் குழறல் ஏற்பட்டு விட்டதாக எடுத்துக் கொண்டுமன்னித்து விடலாம் என்று கூறியுள்ளார் கருணாநிதி.
உள்ளாட்சி அமைப்புகளிலும் கட்சித் தாவல் தடைச் சட்டம் தேவை என்று ஜெயலலிதா கூறுகிறாரே என்றமற்றொரு கேள்விக்கு கருணாநிதி அளித்துள்ள பதிலில், 2004ம் ஆண்டு உள்ளாட்சி தேர்தலில் கட்சித் தாவல்சட்டத்தை இயற்றுமாறு மாநில தேர்தல் ஆணையம், மாநில உள்துறைச் செயலாளருக்கு கடிதம் எழுதியது.அடுத்து இருந்த 2 ஆண்டுகளிலும் ஜெயலலிதாதான் ஆட்சியில் இருந்தார். ஆனால் இதுகுறித்து அவர்கண்டுகொள்ளவே இல்லை. அதைப் பற்றி அவர் கவலைப்படவே இல்லை.
எனவே ஜெயலலிதாவின் செயல்பாடுகளை மக்களே எண்ணிப் பார்த்து ஒரு முடிவுக்கு வரட்டும் என்றுகூறியுள்ளார் கருணாநிதி.