கீரிப்பட்டியில் நிலைமை சரியில்லை: பஞ். தலைவர்
மதுரை:
கீரிப்பட்டியில் நிலைமை சரியில்லை. இருப்பினும் எனது பதவியை ராஜினாமா செய்யாமல் ஐந்து ஆண்டுகளும்பதவி வகிப்பேன் என்று சர்ச்சைக்குரிய மதுரை மாவட்டம் கீரிப்பட்டி தலித் பஞ்சாயத்தின் புதிய தலைவராகதேர்வு செய்யப்பட்டுள்ள பால்ச்சாமி தெரிவித்துள்ளார்.
மதுரை மாவட்டம் கீரிப்பட்டி, பாப்பாபட்டி, நாட்டாமங்கலம் மற்றும் விருதுநகர் மாவட்டம்கொட்டக்காச்சியேந்தல் ஆகிய தலித் பஞ்சாயத்துக்களுக்கு பல காலமாக தலைவர் பதவியில் யாரும் இல்லாதநிலை ஏற்பட்டுள்ளது.
இந்த கிராமங்களில் பெரும்பான்மையானவராக உள்ளவர்கள், தங்களுக்கு தலித் ஒருவர் தலைவராக வருவதைவிரும்பாததால் இந்த நிலைமை. அப்படியே யாராவது தேர்ந்தெடுக்கப்பட்டாலும் கூட அவர்களும் பதவியேற்றஅடுத்த நாளே தங்களது பதவியை ராஜினாமா செய்து விடுவார்கள்.
இந்த நிலையில் சமீபத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கீரிப்பட்டி பஞ்சாயத்துத் தலைவராக பால்ச்சாமிஎன்பவர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளராகபோட்டியிட்டவர் பால்ச்சாமி. ஊர் மக்கள் சார்பாக நிறுத்தப்பட்ட 2 பேரின் வேட்பு மனுக்களை தேர்தல் அதிகாரிநிராகரித்து விட்டதால் பால்ச்சாமி போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
செப்டம்பர் 27ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்த பால்ச்சாமி அதன் பின்னர் தலைமறைவாகி விட்டார்.கீரிப்பட்டியில் உள்ள அவரது வீடும் பூட்டப்பட்டே கிடக்கிறது. பெரும்பான்மை ஜாதியினரால் தனது உயிருக்குஆபத்து ஏற்படலாம் என்பதால் அவர் தலைமறைவாகி விட்டதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் மதுரையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்பால்ச்சாமி. அப்போது மதுரை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. மோகனும் உடன் இருந்தார்.
செய்தியாளர்களிடம் பால்ச்சாமி கூறுகையில், கீரிப்பட்டியில் உள்ள பிரச்சினை அப்படியேதான் உள்ளது.போலீஸார் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும், அதிகரிக்க வேண்டும்.
நான் மார்க்சிஸ்ட் கட்சி, மக்கள், காவல்துறை, அரசாங்கத்தை நம்பித்தான் உள்ளேன். நான் கீரிப்பட்டிபஞ்சாயத்துத் தலைவராக செயல்பட அரசும், காவல்துறையும் எனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
குடிநீர்ப் பிரச்சினை, தெரு விளக்கு, சாலை, வீட்டு வசதி உள்ளிட்ட பிரச்சினைகளைத் தீர்க்க பாடுபடுவேன். தலித்சமுதாயத்தினருக்கு தனி சுடுகாடு தேவை என்ற நீண்ட கால கோரிக்கையையும் நிறைவேற்ற பாடுபடுவேன்.
விரைவில் முதல்வர் கருணாநிதியை சந்தித்து, கீரிப்பட்டி பஞ்சாயத்தின் நீண்ட நாள் கோரிக்கைகளைநிறைவேற்றுமாறு கோரிக்கை விடுப்பேன் என்றார் பால்ச்சாமி.
மற்ற 3 பஞ்சாயத்துக்களிலும் ஊர் மக்களால் நிறுத்தப்பட்டவர்களே தலைவர்களாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால்பதவியேற்ற மறு நிமிடமே அவர்கள் ராஜினாமா செய்து விடக் கூடும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.