கிணற்றில் தவறி விழுந்து 3 குழந்தைகள் பலி
அரக்கோணம்:வேலூர் மாவட்டம் சோளிங்கர் அருகே தரைக் கிணற்றில் 3 குழந்தைகள் தவறிவிழுந்து பரிதாபமாக இறந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சோளிங்கர் அருகே மகாலட்சுமி என்பவர் தனது 3 குழந்தைகளுடன் புல் அறுக்கச்சென்றிருந்தார். அப்பகுதியில், ஒரு தரைக் கிணறு உள்ளது. அதாவது இந்தக்கிணற்றைச் சுற்றி சுற்றுச் சுவர் கிடையாது.
கிணற்றுக்கு அருகே தனது 3 குழந்தைகளையும் உட்கார வைத்து விட்டு மகாலட்சுமிபுல் அறுத்துக் கொண்டிருந்தார். அப்போது 1 வயதுக் குழந்தை தவழ்ந்தபடிகிணற்றுக்கு அருகே சென்றது. அப்போது தவறி கிணற்றுக்குள் விழுந்து விட்டது.
இதைப் பார்த்த மற்ற இரு குழந்தைகளும் அடுத்தடுத்து கிணற்றுக்குள் விழுந்துவிட்டன. இதனால் அதிர்ச்சி அடைந்த மகாலட்சுமி அரிவாளை கீழே போட்டபடிகுழந்தைகளைக் காப்பற்றும் நோக்கில் கிணற்றில் குதித்தார்.
இதை நேரில் பார்த்த அந்த ஊர் மக்கள் ஓடி வந்து நான்கு பேரையும் மீட்டு வெளியேகொண்டு வந்தனர். ஆனால் அவர்களால் மகாலட்சுமியை மட்டுமே உயிருடன் மீட்கமுடிந்தது. தீபிகா, ஷர்மிளா, ஷாலு ஆகிய மூன்று குழந்தைகளும் பரிதாபமாக இறந்துவிட்டனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.