கோவை விமான நிலையத்துக்கு குண்டு மிரட்டல்
கோயம்புத்தூர்:கோவை விமான நிலையத்தை வெடிகுண்டு வைத்துத் தகர்க்கப் போவதாக வந்த தொலைபேசி மிரட்டலால் அங்கு பாதுகாப்பு மேலும்அதிகரிக்கப்பட்டது.
நாடு முழுவதும் விமான நிலையங்களுக்கு நேற்று முதல் பாதுகாப்பு பன்மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவுக்கு நேரடிவிமானங்களை இயக்கும் டெல்லி, மும்பை, சென்னை ஆகிய விமான நிலையங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள பிற விமான நிலையங்களிலும் வழக்கமான பாதுகாப்புடன் கூடுதல் கண்காணிப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந் நிலையில்இன்று காலை கோவை விமான நிலைய மேலாளருக்கு தொலைபேசியில் பேசிய ஒரு நபர், விமான நிலையத்தை குண்டு வைத்துத் தகர்க்கப்போவதாக மிரட்டினார்.
இதைத் தொடர்ந்து விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. பார்வையாளர்கள் விமான நிலையத்திற்குள் நுழைய தடைவிதிக்கப்பட்டது. கோவை நகரின் முக்கியப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. வாகனத் தணிக்கை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டுவருகிறது.
பெரியகுளம் பள்ளிக்கு குண்டு மிரட்டல்:
இதற்கிடையில் தேனி மாவட்டம் பெரியகுளம் கச்சேரியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளிக்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்தது.
இதுகுறித்து பள்ளி தலைமை ஆசிரியர் பெரிகுளம் தென்கரை போலீசாருக்கு தகவல் கொடுத்தார். போலீசார் விரைந்து வந்து பள்ளி முழுவதும்சோதனை நடத்தினார். ஆனால் வெடிகுண்டு எதுவும் சிக்கவில்லை. இந்த வெடிகுண்டு மிரட்டலால் பள்ளி மாணவ, மாணவிகளிடைய பெரும்பரபரப்பு ஏற்பட்டது.