கேள்வி பதில் பிரிவை மூடும் கூகுள்
சான்பிரான்ஸிஸ்கோ:கூகுள் நிறுவனம் தனது கேள்வி பதில் பிரிவை மூட முடிவு செய்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனமும், யாகூநிறுவனமும் இலவச கேள்வி பதில் பிரிவை தொடங்கியதால் இந்த முடிவை கூகுள் எடுத்துள்ளது.
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு கூகுள்.காம் தனது கேள்வி பதில் பிரிவை (கூகுள் ஆன்சர்ஸ்) தொடங்கியது. கூகுள்நிறுவனத்தின் நிறுவனரான லாரி பேஜ் யோசனைப்படி இது தொடங்கப்பட்டது. குறைந்தது 2 டாலர் எனகட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆய்வாளர்களின் கேள்விகளுக்கு இதில் விடை கொடுக்கப்படும்.
கூகுளின் இந்த சேவைக்கு பெரும் வரவேற்பு கிடைத்தது. ஆனால் யாகூ நிறுவனம் கூகுளுக்குப் போட்டியாகஇலவச கேள்வி பதில் பிரிவை ஆரம்பித்ததும் கூகுள் கேள்வி பதில் பிரிவுக்கு வருவோரின் எண்ணிக்கை அடிவாங்கியது. அதேபோல மைக்ரோசாப்ட் நிறுவனமும் இதேபோன்ற இலவச சேவையை தொடங்கியது.
இதனால் கூகுளை சீந்துவார் யாரும் இல்லாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து தனது கேள்வி பதில் பிரிவை மூடிவிட கூகுள் முடிவு செய்தது. இதுதொடர்பான அறிவிப்பையும் தனது இணையதளத்தில் அது வெளியிட்டுள்ளது.
இந்த வாரம் முதல் கேள்விகள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது எனவும், கடைசியாக பெறப்பட்ட கேள்விகளுக்குஇந்த ஆண்டு இறுதி வரை பதில் தரப்படும் என்றும் அது அறிவித்துள்ளது. அதேசமயம், ஏற்கனவே கேட்கப்பட்டகேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதில்கள் இணைய தளத்தில் தொடர்ந்து இருக்கும் என்றும் அது தெரிவித்துள்ளது.
கூகுளின் கேள்வி பதில் பிரிவு நிறுத்தப்படும் முடிவால் அதன் வாடிக்கையாளர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.