மம்தா-கலாமுடன் தே.ஜ.கூ தலைவர்கள் சந்திப்பு
டெல்லிமம்தா பானர்ஜி விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை தேசியஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் இன்று நேரில் சந்தித்து கோரிக்கை விடுக்கவுள்ளனர்.
டாடா நிறுவனத்திற்கு விவசாய நிலங்களை கொடுத்ததை திரும்பப் பெற வேண்டும் என்று மேற்கு வங்க அரசைவலியுறுத்தி திரிணமூல் காங்கிரஸ் கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி கொல்கத்தாவில் சாகும் வரை உண்ணாவிரதம்இருந்து வருகிறார்.
இன்று 25வது நாளாக அவர் உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இது நாடு முழுவதும் பெரும் பரபரப்பில்ஆழ்த்தியுள்ளது. மம்தாவின் போராட்டத்துக்கு பல்வேறு கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றன.
பாஜக தலைவர் ராஜ்நாத் சிங் மம்தாவை நேரில் சந்தித்து தேசிய ஜனநாயகக் கூட்டணி, மம்தாவின்போராட்டத்துக்கு ஆதரவு தருவதாக தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து நேற்று முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணித்தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கூட்டத்தில், குடியரசுத் தலைவர் அப்துல் கலாமை நேரில் சந்தித்துமம்தா விவகாரத்தில் தலையிட வலியுறுத்துவது என முடிவெடுக்கப்பட்டது.
அதன்படி தேசிய ஜனநாயகக் கூட்டணித் தலைவர்கள் இன்று கலாமை சந்திக்கவுள்ளனர்.
இதற்கிடையே, மம்தாவின் உடல் நிலை தொடர்ந்து மோசமாகி வருவதால் அவருக்கு குளுக்கோஸ் ஏற்றவேண்டும் என டாக்டர்கள் கூறியுள்ளனர். ஆனால் அதை ஏற்க மம்தா மறுத்து வருகிறார்.