மீண்டும் துணை மேயர் வசம் சென்னை மாநகராட்சி
சென்னை:சென்னை மாநகராட்சி மேயர் மா.சுப்ரமணியம் உள்ளிட்ட 99 கவுன்சிலர்களும் ராஜினாமா செய்ய முடிவெடுத்துள்ளதால்மாநகராட்சி நிர்வாகம் துணை மேயர் வசம் செல்கிறது.
கடந்த அதிமுக ஆட்சியில் மேயராக இருந்த ஸ்டாலின் முழுப் பதவிக்காலத்தையும் முடிக்கும் முன்னரே அப்பதவியிலிருந்துஅகற்றப்பட்டார். இதனால் மிச்சக் காலத்தை துணை மேயராக இருந்த கராத்தே தியாகராஜன்தான் நிர்வகித்து வந்தார்.
சென்னை மாநகராட்சி வரலாற்றில் இல்லாத அளவுக்கு துணை மேயர் பதவி மிகுந்த சர்ச்சைக்கு உள்ளானது கராத்தே பதவிவகித்தபோதுதான். ஆரம்பித்தில் அதிமுகவில் இருந்த கராத்தே, மாநகராட்சிக் கூட்டத்தில் திமுகவினரை அடக்கி, ஒடுக்கினார்.
பின்னர் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டார் கராத்தே. அவரை கைது செய்ய போலீசார்அலைந்தனர். அவரோ தப்பி நாடு விட்டு நாடு ஓடினார்.
பிறகு காங்கிரஸில் இணைந்தார். சட்டசபைத் தேர்தலில் அதிமுக ஆட்சியை இழந்த நிலையில் திமுகவுடன் சமரசம் பேசி,காங்கிரசில் இணைந்து மீண்டும் மாநகராட்சிக் கூட்டங்களுக்கு தைரியமாக வந்து சென்றார் கராத்தே.
சமீபத்தில் நடந்த மாநகராட்சித் தேர்தலில் திமுக கூட்டணி கிட்டத்தட்ட அத்தனை இடங்களிலும் அமோக வெற்றி பெற்றது.திமுக தனிப் பெரும்பான்மையுடன் மாநகராட்சியைப் பிடித்தது. மேயராக மா.சுப்பிரமணியன் பதவியேற்றார். துணை மேயராகதலித் வகுப்பைச் சேர்ந்த சத்யபாமா பொறுப்பேற்றார்.
இந் நிலையில் மாநகராட்சித் தேர்தல் வன்முறை தொடர்பாக அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்த வழக்கில் நீதிபதிஇப்ராகிம் கலிபுல்லா பரபரப்பு தீர்ப்பை அளித்தார். 99 வார்டுகளில் மறு தேர்தல் நடத்த வேண்டும் என்ற அவரது உத்தரவைமதித்து இந்த வார்டுகளில் தேர்ந்தெடுக்கப்பட்ட திமுக கூட்டணிக் கட்சிகளின் கவுன்சிலர்கள் ராஜினாமா செய்வார்கள் எனமுதல்வர் கருணாநிதி அறிவித்துள்ளார்.
இதனால், மாநகராட்சி நிர்வாகம் முற்றிலும் ஸ்தம்பிக்கும் நிலை உருவாகியுள்ளது. மேயர் உள்ளிட்ட 99 பேரும் விலகுவதால்,புதிதாக தேர்தல் நடந்து , உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வரை மாநகராட்சியில் எந்தத் திட்டத்தையும் அமல்படுத்தமுடியாத நிலை உருவாகும்.
இந் நிலையில் புதிய மேயர் தேர்ந்தெடுக்கப்படும் வரை துணை மேயர் சத்யபாமாதான் மாநகராட்சியை நிர்வகிப்பார் என்றுதெரிகிறது. 99 கவுன்சிலர்கள் பட்டியலில் அவரது பெயரும், வார்டும் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கராத்தேவுக்குப் பிறகு சென்னை மாநகராட்சி மீண்டும் துணை மேயரின் நிர்வாகத்தின் கீழ் வரும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையே அதிமுக சார்பில் போட்டியிட்டு வென்று பின்னர் திமுகவில் இணைந்த கவுன்சிலர் சுபாஷ் சந்திரபோஸ், மதிமுகசார்பில் போட்டியிட்டு வென்று திமுகவில் இணைந்த கன்னியப்பன் ஆகியோரின் நிலை தான் கேள்விக்குறியாகியுள்ளது.இவர்களே மீண்டும் அந்தந்த வார்டுகளில் போட்டியிட திமுக அனுமதி தருமா என்று தெரியவில்லை. இந்த வார்டுகளின்திமுகவினர் அதை ஏற்பார்களா என்றும் தெரியவில்லை.