அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு-65 பேர் காயம்
மதுரை:உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் நடந்து முடிந்தது. மாடுகளைப் பிடிக்கும் முயற்சியில் 65 பேர் காயமடைந்தனர்.
மதுரை அருகே உள்ள அலங்காநல்லூரில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையையொட்டி ஜல்லிக்கட்டு நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு ஜல்லிக்கட்டை நடத்த மதுரை உயர்நீதிமன்றக் கிளை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது.
![]() |
அதன்படி நேற்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சித் தலைவர் உதயச் சந்திரன், காவல்துறைக் கண்காணிப்பாளர் அன்பு ஆகியோரது நேரடி மேற்பார்வையில், ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
பார்வையாளர்களையும், போட்டியாளர்களையும் தனியாகப் பிரிக்கும் வகையில், தடுப்புகள் அமைக்கப்பட்டன. போட்டியாளர்களுக்கு சீருடை கொடுக்கப்பட்டது. போட்டியில் கலந்து கொள்வோருக்கும், காளைகளுக்கும் மது அருந்தியிருப்பதை கண்டறியும் சோதனைகள் நடத்தப்பட்டன.
![]() |
போட்டி நடந்த இடத்திற்கு அருகே மருத்துவக் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டிருந்தது.
இத்தனை முன்னேற்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு வழக்கமான விறுவிறுப்புடனும், பரபரப்புடனும் நடந்தது. தமிழத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 500க்கும் மேற்பட்ட வீரர்கள் மாடு பிடிக்கும் முயற்சியில் குதித்தனர். 600க்கும் மேற்பட்ட காளைகள் போட்டியில் கலந்து கொண்டன.
மது அருந்தியிருந்ததால் 3 போட்டியாளர்களுக்கும், 7 காளைகளுக்கும் போட்டியில் கலந்து கொள்ள அனுமதி அளிக்கப்படவில்லை.
![]() |
திமிறி வந்த காளைகளை அடக்க வீரர்கள் கடுமையாக போட்டியிட்டனர். பல காளைகள் யாருக்கும் அடங்காமல், அத்தனை பேரையும் நெட்டித் தள்ளி விட்டு ஓடின. சில காளைகள், காளையர்களின் வீரப் பிடியில் சிக்கின.
மாடு பிடிக்கும் முயற்சியில் 65 பேர் காயமடைந்தனர். அவர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. 7 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதேபோல சிவகங்கை மாவட்டம் சிறாவயல் கிராமத்தில் மஞ்சு விரட்டு நடந்தது. புதுக்கோட்டை மாவட்டத்தில் 14 கிராமங்களில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிகள் நடந்தன.
இதில் ராயவரம் என்ற கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டில் பிச்சை என்பவர் மாடு முட்டி இறந்தார். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
ஜல்லிக்கட்டு தவிர ரேக்ளா ரேஸ், மாட்டுவண்டிப் போட்டி உள்ளிட்டவையும் சில இடங்களில் நடந்தன.















Click it and Unblock the Notifications