சென்னை தேர்தலில் தேமுதிக போட்டி
சென்னை:சென்னை மாநகராட்சி மறு தேர்தலில் தேமுதிக போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
சென்னை மாநகராட்சியின் 100 வார்டுகளுக்கு வருகிற 18ம் தேதி மறு தேர்தல் நடைபெறவுள்ளது. தேர்தல் ஆணையர் சந்திரசேகரன் இருக்கும் வரைதமிழகத்தில் எந்தத் தேர்தலிலும் போட்டியிட மாட்டோம் என அதிமுகவும், மதிமுகவும் கூறி விட்டன.
எனவே இந்த மறு தேர்தலிலும் திமுக கூட்டணியினரே வெற்றி பெறக் கூடிய சூழ்நிலை உள்ளது. திமுக கூட்டணிக் கட்சிகள் தவிர எதிர்க்கட்சிவரிசையில் பாஜக மட்டுமே தற்போதைக்கு போட்டியில் உள்ளது. தேமுதிக போட்டியிடுமா என்பது தெளிவாக தெரியாமல் இருந்தது.
இந்த நிலையில் தேமுதிக போட்டியிடும் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தேர்தல் முறைகேடுகளுக்குக் காரணமான தேர்தல் ஆணையர், மக்களுக்குப் பாதுகாப்புத் தரத்தவறிய மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோரை மாற்ற வேண்டும். டெல்லி தேர்தல் ஆணையம் மூலம் மறு தேர்தலை நடத்த வேண்டும் என்றுநான் கோரினேன். ஆனால் அது செவிடன் காதில் ஊதிய சங்காக போய் விட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா, 99 வார்டுகளில் நடந்த தேர்தல் செல்லாது என்று அறிவித்துள்ளார். அரசன் அன்றுகொல்வான், தெய்வம் நின்று கொல்லும் என்று நான் சொன்னதற்கேற்ப நடந்து விட்டது. இதனால் வேறு வழியின்றி 98 கவுன்சிலர்கள் ராஜினாமாசெய்து தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதே ஆட்சி, அதே தேர்தல் ஆணையர், அதே காவல்துறை ஆணையர் என்பதால் இந்த மறு தேர்தல் முறையாக, ஒழுங்காக நடக்குமா என்றசந்தேகம், அச்சம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. இருப்பினும் தேர்தலை அறவே புறக்கணித்தால், அராஜகத்தில் ஈடுபட்டவர்கள் எளிதாக வெற்றிபெற்று விட முடியும். இதன் மூலம் நீதிபதி அளித்த தீர்ப்பு நிர்மூலமாக்கப்பட்டு விடும்.
இந்த அராஜகத்தைத் தடுக்கவும், நீதியை நிலைநாட்டவும், மக்கள் அமைதிப் புரட்சி செய்ய தேர்தலில் வாய்ப்பளிப்பதுதான் சரியான வழியாகும்.
இந்த வகையில், ஜனநாயகக் கடமையாற்றும் வகையில், மக்கள்தான் நமது எஜமானர்கள் என்பதை எடுத்துக் காட்ட தேமுதிக தேர்தலில் போட்டியிடதீர்மானித்துள்ளது.
மக்களை மட்டுமே நம்பி தேமுதிக களத்தில் இறங்குகிறது. உங்களது ஆதரவை தேமுதிக வேட்பாளர்களுக்கு அளித்து அவர்களை வெற்றி பெறச்செய்வதன் மூலம் தமிழ்நாட்டின் வரலாற்றில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்த பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்விஜயகாந்த்.












Click it and Unblock the Notifications