காவிரி தீர்ப்பு: அச்சத்தில் கர்நாடகத் தமிழர்கள்
பெங்களூரு:காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரவுள்ளதைத் தொடர்ந்து கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு மத்திய, மாநில அரசுகள் முழுபாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம், கர்நாடகத் தமிழர் பேரவை ஆகியவை கோரிக்கைவிடுத்துள்ளன.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு பிப்ரவரி 5ம் தேதி வெளியாகிறது. தீர்ப்பு தமிழகத்திற்குச் சாதகமாக அமையும் என பொதுவானஎதிர்பார்ப்பு உள்ளது.
ஏற்கனவே காவிரி நடுவர் மன்றம், தமிழகத்துக்கு ஆண்டுதோறும் கர்நாடகா 205 டிஎம்சி தண்ணீர் தர வேண்டும் என 1991ம் ஆண்டு இடைக்காலத்தீர்ப்பு வழங்கியது. அப்போது கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக பெரும் வன்முறை, கலவரம் வெடித்தது.
பெங்களூர், மைசூர், மாண்டியா, சென்னப்பட்டனா உள்ளிட்ட தமிழர்கள் அதிக அளவில் வசிக்கும் பகுதிகளில் குறி வைத்துத் தாக்கப்பட்டனர். பலர்உயிரிழந்தனர், தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்பட்டன. வீடுகள், சொத்துக்களை இழந்து தமிழர்கள் ஆயிரக்கணக்கில் தமிழகத்திற்குஅகதிகளாக ஓடி வந்தனர்.
இந்த நிலையில் இறுதித் தீர்ப்பு வெளியாகவுள்ளது. எனவே தமிழகத்திற்குச் சாதகமான தீர்ப்பு வந்தால் 1991ம் ஆண்டைப் போல இந்த முறையும்பெரும் வன்முறை வெடிக்கும் என்ற அச்சம் கர்நாடகத் தமிழர்கள் மத்தியில் நிலவி வருகிறது.
இதைத் தொடர்ந்து கர்நாடக மாநில திமுக தலைவர் வி.டி.சண்முகம் தலைமையில் கர்நாடக தமிழ் அமைப்புகள் .ன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில்இறங்கியுள்ளன.
கர்நாடகத்தில் வசிக்கும் தமிழர்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என வலியுறுத்தி மத்திய அரசுக்கும், கர்நாடக அரசுக்கும் கோரிக்கைகள்விடுக்கப்பட்டு வருகின்றன.
இதுதொடர்பாக கர்நாடகத் தமிழர் பேரவை தலைவர் ஏ.பி.சண்முகசுந்தரம், குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், பிரதமர் மன்மோகன் சிங், உள்துறைஅமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோருக்கு தந்தி அனுப்பியுள்ளார்.
மேலும், கர்நாடக ஆளுநர் டி.என். சதுர்வேதி, முதல்வர் குமாரசாமி, மாநில போலீஸ் அமைச்சர் எம்.பி.பிரகாஷ், டிஜிபி சீனிவாஸ், முதன்மைச்செயலாளர் மகிஷி ஆகியோரை நேரில் சந்தித்தும் இதுதொடர்பாக கோரிக்கை வைத்துள்ளார்.
கர்நாடக தமிழ் மக்கள் இயக்கம் சார்பில் பெங்களூர் மாநகர காவல்துறை ஆணையர் நீலம் அச்சுதராவை நேரில் சந்தித்து தமிழர்களுக்கு முழுப்பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
தமிழர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிக்கப்படும் என அச்சுதராவும் உறுதியளித்துள்ளார்.












Click it and Unblock the Notifications