சென்னை லாட்ஜில் பெண் சாவு-வாலிபருக்கு வலை
சென்னை:சென்னையில் உள்ள விடுதியில் பூட்டிய அறைக்குள் இளம்பெண் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவரைக் கொலை செய்து விட்டுதப்பியதாக கூறப்படும் வாலிபரைப் பிடிக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
எழும்பூர் ரயில் நிலையம் எதிரே உள்ள டூரிஸ்ட் ஹோம் என்ற லாட்ஜில், வியாழக்கிழமை காலை 7.30 மணிக்கு ஒரு பெண்ணும், வாலிபரும் அறைகேட்டு வந்தனர்.
சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்திருப்பதாகவும், கணவன், மனைவி என்றும் கூறி தஞ்சை முகவரியைக் கூறி அறைஎடுத்தனர். 3வது மாடியில் உள்ள அறை அவர்களுக்கு ஒதுக்கப்பட்டது.
அறைக்கு வந்த இருவரும் ஒரே ஒரு காபி மட்டும் சாப்பிட்டுள்ளனர். அதன் பின்னர் அறைக் கதவு திறக்கப்படவே இல்லை. நேற்று காலை 10மணிக்கு விடுதி ஊழியர்களுக்கு சந்தேகம் வந்துள்ளது. அறைக் கதவைத் தட்டிப் பார்த்துள்ளனர். ஆனால் கதவு திறக்கப்படவில்லை.
இதையடுத்து ஜன்னல் வழியாக பார்த்தபோது அந்தப் பெண் மட்டும் கட்டிலில் மல்லாக்க படுத்திருந்தார். அவர் இறந்திருந்தது தெரிய வந்தது.இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது.
போலீஸார் விரைந்து வந்து அறைக் கதவைத் திறந்து அந்தப் பெண்ணின் பிணத்தை மீட்டனர். பிரேதப் பரிசோதனைக்கு உடல் அனுப்பிவைக்கப்பட்டது.
இறந்து கிடந்த பெண் கருப்பாக, குண்டாக இருந்தார். அவரது உடலில் ஒரு நகையும் இல்லை. சாதாரண பட்டுச் சேலை அணிந்திருந்தார். உடலில்எந்தக் காயமும் இல்லை, அந்தப் பெண்ணுடன் தங்கியிருந்த வாலிபரும், இப்பெண்ணும் உடலுறவு கொண்டதற்கான அடையாளமும் இல்லை.
அந்த வாலிபரைக் காணவில்லை. அவர் தலைமறைவாகி விட்டார். அவர் கொடுத்த தஞ்சை முகவரி போலியானது என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. அதேபோல அவர் கொடுத்த ரிலையன்ஸ் செல்போன் எண்ணும் போலியானது என்பது தெரிய வந்துள்ளது.
இறந்து கிடந்த பெண் விபச்சாரப் பெண்ணாக இருக்கலாம் என போலீஸார் சந்தேகிக்கின்றனர். ஆனால் அந்தப் பெண்ணும், வாலிபரும் உறவுகொண்டதற்கான எந்த அடையாளமும் தெரியவில்லை.
காபியில் விஷம் கலந்து அந்தப் பெண்ணை அந்த வாலிபர் கொன்றிருக்க வேண்டும் அல்லது இவராக தற்கொலை செய்து கொண்டிருக்கவேண்டும் என போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
அறையில் எந்தவிதத் துப்பும் கிடைக்காததால் போலீஸார் பெரும் குழப்பமடைந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications