காவிரி: பெங்களூரில் 16,000 போலீஸ் குவிப்பு
பெங்களூரு:காவிரி நடுவர் மன்றம் நாளை இறுதித் தீர்ப்பு அளிக்கவுள்ளதால், பெங்களூர் நகரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 16 ஆயிரம் போலீஸார்பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
தமிழகம், கர்நாடகம், புதுச்சேரி மற்றும் கேரள மாநிலங்கள் காவிரி நீரைப் பங்கிட்டுக் கொள்வதில் பிரச்சினை ஏற்பட்டது. இதையடுத்துதமிழகத்தின் கோரிக்கையை ஏற்று கடந்த 1990ம் ஆண்டு அப்போதைய பிரதமர் வி.பி.சிங்கின் உத்தரவின் பேரில் காவிரி நடுவர் மன்றம்அமைக்கப்பட்டது.
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு வரத் தாமதமாகும் என்பதால் இடைக்கால உத்தரவை நடுவர் மன்றம் பிறப்பிக்க வேண்டும் என தமிழக அரசுகோரியது. ஆனால் இதை எதிர்த்து கர்நாடகம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஆனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம், நடுவர் மன்றம் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கலாம் என அனுமதி அளித்தது.இதையடுத்து கடந்த 1992ம் ஆண்டு இடைக்கால உத்தரவை நடுவர் மன்றம் பிறப்பித்தது. இதையடுத்து தமிழகத்தில் பெரும் கலவரம் வெடித்தது.
இடைக்கால உத்தரவின்படி ஆண்டுக்கு 205 டிஎம்சி தண்ணீரை தமிழகத்திற்கு கர்நாடகம் விடுவித்திருக்க வேண்டும். ஆனால் இதுவரை அந்தஉத்தரவை கர்நாடகம் முழுமையாக அமல்படுத்தியதில்லை.
இந் நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக நடந்து வந்த நடுவர் மன்ற விசாரணை முடிவடைந்து, வருகிற 5ம் தேதி இறுதித் தீர்ப்பு வெளியாகவுள்ளது.ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி என்.பி.சிங் தலைமையிலான 3 பேர் கொண்ட நடுவர் மன்றம் தீர்ப்பை அறிவிக்கவுள்ளது.
நான்கு மாநிலங்களின் மொத்த காவிரி நீராதாரம், விளைநிலங்களின் பரப்பளவு, மாநிலங்களின் நீராதாரம் உள்ளிட்ட 6 முக்கிய அம்சங்களைஅளவுகோலாகக் கொண்டு கடந்த 17 ஆண்டுகளாக விசாரணை நடந்து வந்தது. அதன் அடிப்படையில் தீர்ப்பு வெளியாகவுள்ளது.
தீர்ப்பு தமிழகத்திற்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இதனால் கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக கலவரம் வெடிக்கக் கூடும்என்ற அச்சம் பரவியுள்ளது.
இந் நிலையில் கர்நாடக முதல்வர் குமாரசாமி தலைமையில் பெங்களூரில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடந்தது. அதில் தீர்ப்பு எப்படிப்பட்டதாகஇருந்தாலும் அதை எதிர்கொள்வது என்று முடிவு எடுக்கப்பட்டது. மேலும் காவிரி படுகை மாவட்டங்களிலும் பெங்களூரிலும் பாதுகாப்பைபலப்படுத்தவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு மற்றும் காவிரிப் பாசனப் பகுதி மாவட்டங்களான மாண்டியா, சாம்ராஜ் நகர் உள்ளிட்ட மாவட்டங்களில் பாதுகாப்பு பன்மடங்குஅதிகரிக்கப்பட்டுள்ளது.
பெங்களூரு நகரில் மட்டும் 16 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இவர்களில் முக்கால்வாசிப் பேர் கேரளா,ஆந்திரா, மகாராஷ்டிர மாநில போலீஸார் ஆவர்.
இதுதவிர கர்நாடகத்தின் பிற மாவட்டங்களிலிருந்து 100 காவல்துறை அதிகாரிகளும், 600 போலீஸாரும் பெங்களூருக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எந்தவித அசம்பாவித நிலைமையையும் சமாளிக்கும் வகையில் பெங்களூரு போலீஸார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். பதட்டமானபகுதிகளிலும், தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளிலும் கலவரத் தடுப்பு வாகனங்கள் நிறுத்தப்படவுள்ளன.
பொதுமக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம் என கர்நாடக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.
காவிரி பாசன மாவட்டங்களில் ...
இதேபோல காவிரிப் பாசன மாவட்டங்களான மாண்டியா, மைசூர், சாம்ராஜ் நகர், பெங்களூர் ஊரகம், ஹசன், தும்கூர் ஆகியவற்றிலும்முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
இப்பகுதிகளிலும் தமிழர்கள் கணிசமாக வசிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து மாண்டியா மாவட்ட எஸ்.பி. பிரகாஷ் கூறுகையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கர்நாடக ரிசர்வ் போலீஸ் படைகள்மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் குவிக்கப்பட்டுள்ளனர். மாவட் ஆயுதப் படை வீரர்கள், அதி விரைவுப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்என்றார்.
காவிரி பாசனப் பகுதி மாவட்டங்களிலும் வெளி மாநிலப் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications