ராக்கெட் குண்டு வெடித்து கோவில் பூசாரி பலி
திருச்சி:திருச்சி மாவட்டம் மணப்பாறையில் ராக்கெட் குண்டு வெடித்ததில் கோவில் பூசாரி பலியானார்.
மணப்பாறையை அடுத்த வையம்பட்டி காவல் நிலையத்துக்குட்பட் வீரப்பூர் பகுதியில் ராணுவத்தினருக்கான துப்பாக்கி சுடும் மையம் உள்ளது.
இங்கு கடந்த ஒரு வாரமாக துப்பாக்கிச் சுடும் பயிற்சி நடந்து வருகிறது. இதில் நான்கு ராக்கெட் லாஞ்சர் குண்டுகள் மலைப் பகுதிக்குப் பின்னால் உள்ள புதரில்விழுந்தன. அவை வெடிக்கவில்லை.
இந்த துப்பாக்கிக் குண்டுகளின் சிதறல்களை பொறுக்கி விற்பனை செய்வதற்காக பூசாரிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்கள் மலைப் பகுதிக்குச் சென்றனர்.
அப்போது செல்வம் என்ற பூசாரி (வயது 30) வெடிக்காத ராக்கெட் லாஞ்சர் குண்டை எடுத்து தனது வீட்டுக்குக் கொண்டு வந்துள்ளார். அதைப் பார்த்த அவரது மனைவிலட்சுமி குண்டை கொண்டு வந்து விட்டீர்களே, வெடித்தால் என்னாவது என்று கவலைப்பட்டுள்ளார்.
இதையடுத்து குண்டை வீட்டை விட்டு வெளியே கொண்டு வந்த செல்வம் அதை அரிவாளால் தட்டிப் பார்த்துள்ளார். அது உடையவில்லை. இதையடுத்து அதன் மேல்கல்லைத் தூக்கிப் போட்டுள்ளார். அப்போது குண்டு பலத்த சப்தத்துடன் வெடித்துச் சிதறியது.
இதில் செல்வம் தூக்கி எறியப்பட்டார். அவரது உடல் பல பகுதிகளாக சிதறி அங்கேயே பரிதாபமாக இறந்தார். போலீஸாருக்குத் தகவல் போய் அவர்கள் விரைந்துவந்து செல்வத்தின் உடலை மீட்டனர்.
செல்வம் அதிமுகவைச் சேர்ந்தவர். அவருக்கு மனைவி, 2 மகன்கள் உள்ளனர். 40 நாட்களுக்கு முன்புதான் ஒரு மகள் பிறந்தாள். அப்பகுதியில் உள்ள கன்னிமாரம்மன்கோவிலில் பூசாரியாகவும் இருந்து வந்தார் செல்வம்.












Click it and Unblock the Notifications