டிராவிடுக்கு வந்த ஆர்.எஸ்.எஸ். சோதனை
நாக்பூர்:ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பள்ளிக் கூடத்துக்குப் போய், சூரிய நமஸ்காரம் செய்தால் உடம்புக்கு நல்லது என்று சொல்லப் போக இப்போதுகம்யூனிஸ்ட் கட்சியினரின் கண்டனத்துக்கு ஆளாகியுள்ளார் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் ராகுல் டிராவிட்.
ஆர்.எஸ்.எஸ். அமைப்பில், வித்ய பாரதி என்ற உப அமைப்பு உள்ளது. இந்த அமைப்பு நாடு முழுவதும் ஏராளமான பள்ளிக்கூடங்களை நடத்திவருகிறது.
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் வித்ய பாரதி பள்ளிக்கூடத்தில் கடந்த மாதம் 20ம் தேதி சூரிய நமஸ்கார நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இதில் கலந்துகொள்ளுமாறு டிராவிடை அழைத்திருந்தனர். அவரும் வந்திருந்தார்.
மாணவர்களிடையே பேசிய டிராவிட், அனைவரும் சூரிய நமஸ்காரம் செய்வோம். அது நமது உடலை, மனதை வலுப்படுத்தும் என்று பேசினார்.இந்த நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ். தலைவர்களும் பங்கேற்றனர்.
இங்குதான் வம்பு வந்தது. டிராவிட் எப்படி ஆர்.எஸ்.எஸ். அமைப்பு நடத்தும் பள்ளிக் கூடத்துக்குப் போகலாம் என கம்யூனிஸ்ட் கட்சிகள்போர்க்கொடி உயர்த்தியுள்ளன.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பிருந்தா காரத் இதுகுறித்துக் கூறுகையில், தனிப்பட்ட முறையில் டிராவிட் எந்த முடிவையும் எடுக்கலாம். அதையாரும் தடுக்கப் போவதில்லை. ஆனால் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக இருக்கும்டிராவிட் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டது தவறு.
மத நோக்கத்தைக் கொண்டஆர்.எஸ்.எஸ். அமைப்பின் நிகழ்ச்சியில் டிராவிட் பங்கேற்றது ஆச்சரியமாக உள்ளது என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியச் செயலாளர் ராஜா கூறுகையில், ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் பள்ளி என்று தெரிந்தும் டிராவிட் கலந்துகொண்டது தவறு என்று கூறியுள்ளார்.
ஆனால் டிராவிட் இதை மறுத்துள்ளார். பள்ளிக் குழந்தைகள் கலந்து கொள்ளும் யோகாசன நிகழ்ச்சி என்று கூறித்தான் என்னை அழைத்தனர்.அதனால்தான் நானும் போனேன். இதில் அரசியல் இருப்பதாக நான் கருதவில்லை.
கிரிக்கெட் வீரர்கள் கூட யோகாசனம் செய்கிறோம். இதை ஏன் பெரிதுபடுத்துகிறார்கள் என்று புரியவில்லை என்றார்.












Click it and Unblock the Notifications