பஸ்கள் தொடர்ந்து ஒசூரிலேயே முடக்கம்:அலைகழிக்கப்படும் பயணிகள்
அந்தியூர்:காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு பின்பு கர்நாடகவில் அங்கங்கே பதற்றம் நிலவுவதால் அங்கிருந்து தமிழக விவசாயிகள் அவர்களாது சொந்தஊருக்கு திரும்பி வருகின்றனர்.
பர்கூர் அருகே தமிழக எல்லையில் கர்நாடக மாநிலம் கர்கே கண்டி, ஊகியம், மாக்காம்பாளையம் நல்லூர் ஆகிய பகுதியில் தோட்டங்களைகுத்தகைக்கு எடுத்து தமிழர்கள் விவசாயம் செய்து வருகின்றனர்.
தற்போது காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு காரணமாக நிலவும் பதற்றமான சூழ்நிலையால் அவர்கள் அங்கிருந்து அவர்களாது சொந்த ஊருக்கு திரும்பிவிட்டனர்.
அதே போல எல்லப்பாளையம், எண்ணமங்கலம், வட்டக்காடு பகுதியை சேர்ந்த விவசாயிகளும் சொந்த ஊர் திரும்பி வருகின்றனர்.
லாரிகள் நிறுத்தம்-கடும் நஷ்டம்:
இந்நிலையில் கர்நாடகம் வழியாக வட மாநிலங்கள் செல்லும் தமிழக லாரிகள் போக்குவரத்து அடியோடு நின்றுவிட்டது.
இதனால் நாமக்கல்லில் இருந்து முட்டை, கோழிகள், திருப்பூர், ஈரோடு பகுதிளில் இருந்து ஜவுளி, தென் மாவட்டங்களில் இருந்து பருப்பு,தீப்பெட்டிகள், எண்ணெய், பட்டுக் கூடுகள் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வது அடியோடு பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்தப்பொருட்கள் தேங்க ஆரம்பித்துள்ளன.
குன்னூரில் ரூ. 1 கோடி தேயிலை தேக்கம்:
நீலகிரி மாவட்டம் குன்னூரில் தேயிலை ஏல மையத்தில் விற்பனையாகும் மொத்த அளவில் 60 சதவீதம் கர்நாடகம், ஆந்திரா, குஜராத்,மஹாராஷ்டிரா போன்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.
குன்னூரிலிருந்து ஊட்டி, கூடலூர், மைசூர் வழியாகவே வட மாநிலங்கள் மற்றும் ஆந்திரா, கர்நாடகத்துக்கு லாரிகள் செல்கின்றன.
கர்நாடகவில் பதட்டம் நிலவுவதால் லாரிகள் செல்ல முடியவில்லை. இதனால் ரூ. கோடி ரூபாய் மதிப்புள்ள சுமார் 2 லட்சம் கிலோ தேயிலை தூள்தேங்கியுள்ளது.
இந் நிலையில் இன்று பிற்பகல் முதல் சில லாரிகள் கர்நாடகம் வழியாக செல்ல ஆரம்பித்துள்ளன.
அதிரடிப்படை வீரர்கள் குவிப்பு:
இந்நிலையில் தமிழக, கர்நாடகா எல்லைப் பகுதியில் கூடுதல் பாதுகாப்புக்காக அதிரடிப்படை வீரர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஒசூரிலும், சத்தியமங்கலம் போன்ற பகுதிகளிலும் திடீர் வன்முறைகள் ஏற்படும் வாய்ப்பு இருப்பதால் கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள சோதனைசாவடிகள் அருகே ஆயுதம் தாங்கிய போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
போக்குவரத்து பதிப்பு:
தமிழக, கர்நாடகா இடையே 3வது நாளாக இன்றும் பஸ் போக்குவரத்து நடைபெறவில்லை.
தமிழகத்தில் இருந்து கர்நாடகம் செல்லும் அரசு, தனியார், ஆம்னி பேருந்துகள் தமிழக எல்லைப்பகுதியான ஓசூரிலேயே நிறுத்தப்பட்டுவிகின்றன.
இந்நிலையில் நேற்று முதல் பெங்களூரில் நிலைமை சற்று சீரடைந்ததால் பிற்பகலில் காவல்துறை பாதுகாப்புடன் கர்நாடக எல்லையான அத்திபலேவரை கர்நாடக பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. சில தமிழக பஸ்களும் அத்திபலே வரை இயக்கப்படுகின்றன.
இந்நிலையில் நாளை அறிவிக்கப்பட்டு இருந்த பந்த் 12ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டு உள்ளதால், நாளை முதல் போக்குவரத்து சீரடையும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications