கர்நாடகத்தில் திங்கள்கிழமை பந்த்: பெங்களூரில் கலவர பீதி
பெங்களூர்:காவிரி நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து வரும் திங்கள்கிழமை (12ம் தேதி) பந்த் நடத்த கன்னட அமைப்புகள் அழைப்பு விடுத்துள்ளன.இதனால் தமிழர்கள் மத்தியில் பெரும் அச்சம் பரவியுள்ளது.
கன்னட விவசாயிகள் அமைப்புகள், வாட்டாள் நாகராஜின் கன்னட சாளுவளி உள்ளிட்டவை இந்த பந்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இந்தபந்துக்கு கர்நாடக அரசு ஊழியர்கள் சங்கம், போக்குவரத்து ஊழியர்கள் சங்கம் ஆகியவையும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதனால் பந்த் முழு அளவில் இருக்கும் எனத் தெரிகிறது.
இதையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு அரசு விடுமுறை அறிவித்துள்ளது. அதே போல தனியார் நிறுவனங்களும் அன்று மூடப்பட்டுவிடும்.
போக்குவரத்து ஊழியர்கள் ஆதரவால் கர்நாடகம் முழுவதும் பஸ் போக்குவரத்து ஸ்தம்பிக்கவுள்ளது.
குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்களான பெங்களூர், மைசூர், மாண்டியா, சாம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்களில் தான் பந்த் மிகக் கடும்பாதிப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது. இந்த மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து போராட்டங்கள், சாலை மறியல்கள், ரயில்மறியல்கள் நடந்து வருகின்றன.
மாண்டியாவில் நேற்று மருத்துவமனை ஊழியர்கள், டாக்டர்கள், நர்சுகள், நர்சிங் மாணவர்களும் கூட போராட்டத்தில் குதித்தனர். பெங்களூரிலும்சிறிய அளவில் ஆங்காங்கே போராட்டங்கள் நடந்து வருகின்றன.
ஆனாலும் பெங்களூரில் இதுவரை இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.
தமிழக பயணிகளும், தமிழக லாரிகளும் தான் பெரும் பாதிப்பை சந்தித்து வருகின்றனர். தமிழக அரசு பஸ்கள் இன்றும் கர்நாடகத்துக்குள்அனுமதிக்கப்படவில்லை. லாரிகள் மட்டுமே நள்ளிரவு 11 மணி முதல் காலை 4 மணி வரை கர்நாடகத்துக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றன.
அதே நேரத்தில் கர்நாடக லாரிகள் தமிழகத்துக்குள் இயங்கி வருகின்றன.
இந் நிலையில் 12ம் தேதி பந்த்தையொட்டி கலவரம் வெடிக்கலாம் என்ற அச்சமும் பீதியும் நிலவுகிறது. அதே போல 13ம் தேதி கன்னட திரையுலத்தின்சார்பில் கவர்னர் மாளிகையை நோக்கி ஊர்வலம் நடக்கிறது.
இதற்கு மத்திய அமைச்சரும் நடிகருமான அம்பரீஷ் மற்றும் சரோஜா தேவி ஆகியோர் தலைமை தாங்கவுள்ளனர். சரோஜா தேவிக்கு கை முறிவுஏற்பட்டுள்ளதால் ஓய்வில் இருக்கிறார். அவர் வருவது சந்தேகமாகியுள்ளது.
அதே நேரத்தில் இந்த ஊர்வலத்தில் கன்னட முன்னணி நட்சத்திரங்களான ராஜ்குமாரின் மகன்கள் சிவ ராஜ்குமார், புனீத் ராஜ்குமார் உள்ளிட்டோர்பங்கேற்கவுள்ளனர்.
பந்த் மற்றும் கன்னட சினிமா துறையினரின் பேரணியையொட்டி கலவரம் வெடிக்காமல் தடுக்க கடும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.ஏற்கனவே கர்நாடகத்தில் முகாமிட்டுள்ள ஆந்திர, கேரள, மகாராஷ்டிர போலீசாரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடவுள்ளனர்.
அதே போல மத்திய ரிசர்வ் படைகளின் பாதுகாப்பையும் கர்நாடகம் கோரியுள்ளது. கூடவே ராணுவமும் தயார் நிலையில் வைக்கப்படவுள்ளது.நாளை முதலே பெங்களூரில் ரோந்துப் பணி ஆரம்பமாகவுள்ளது.
கர்நாடக-தமிழக ரயில்களில் பாதுகாப்பை அதிகமாக்க ஆந்திராவில் இருந்து ரயில்வே போலீசாரை ரயில்வே நிர்வாகம் வரவழைத்துள்ளது.
கடந்த 8ம் தேதி நடத்த திட்டமிடப்பட்ட பந்த் சர்வதேச விமானக் கண்காட்சி காரணமாக திங்கள்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications