யாழ்-கண்ணி வெடியில் சிக்கி 8 ராணுவத்தினர் பலி
கொழும்பு:யாழ்ப்பாணம் மாவட்டம் பலாலி பகுதியில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் சிக்கி 8 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ராணுவத்தைக் குறி வைத்து கடந்த சில நாட்களாக விடுதலைப் புலிகள் கண்ணிவெடித் தாக்குதலை நடத்தி வருகின்றனர். இந் நிலையில்யாழ்ப்பாணம் அருகே உள்ள பலாலி நகரில் ஊரெழு என்ற இடத்தில் ராணுவ வீரர்கள் பேருந்து ஒன்றில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது ராணுவ முகாம் அருகே அந்தப் பேருந்து சென்றபோது கண்ணிவெடியில் சிக்கியது. இதில், பேருந்து முற்றிலும் சேதமடைந்தது. இதில் 8பேர் பலியானார்கள். சாவு எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த தாக்குதலை விடுதலைப் புலிகள் ஊர்ஜிதம் செய்துள்ளனர். ஆனால் ராணுவத் தரப்பில் எந்தத் தகவலும் இல்லை.
இந்தியாவுக்கு ராஜபக்ஷே கூறும் அறிவுரை:
இலங்கை இனப் பிரச்சினையில் இந்தியா கூடுதல் அக்கறையுடன், பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் என்று இலங்கை அதிபர் ராஜபக்ஷே கூறியுள்ளார்.
பிபிசி தொலைக்காட்சிக்கு ராஜபக்ஷே அளித்துள்ள பேட்டியில் இலங்கைப் பிரச்சினையில், வேறெந்த நாட்டையும் விட இந்தியாவுக்குத்தான் பொறுப்புகள் அதிகம்.
இந்தப் பிரச்சினையை பொறுப்புடன் அணுகி, சுமூகத் தீர்வு காண அதிக ஆதரவை இந்தியா கொடுக்க வேண்டும். இலங்கையின் மிக நெருங்கிய நட்பு நாடு இந்தியா. எனவே பிரச்சினையைத் தீர்ப்பதில்இந்தியாவுக்குத்தான் கடமை அதிகம்.
இலங்கையிடமிருந்து இந்தியா பல பாடங்களைக் கற்றுக் கொண்டிருக்கும். நேபாளத்தில் பிரச்சினையைத் தீர்க்க இலங்கை பாடம்தான் இந்திய அரசுக்கு உதவியுள்ளது.
எனவேதான் இலங்கைப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு இந்தியாவுக்கு அதிக கடமையும், பொறுப்பும் உள்ளது என்று நான் திரும்பத் திரும்பக் கூறி வருகிறேன் என்றார் ராஜபக்ஷே.
விடுதலைப் புலிகளுடன் அமைதி ஒப்பந்தம் செய்து கொண்டது தவறு என்றும் தனது பேட்டியின்போது ராஜபக்ஷே தெரிவித்தார்.
சந்திரிகா தம்பிக்கு ராஜபக்ஷே "ஆப்பு":
தனக்கு எதிராக போர்க்கொடி உயர்த்திய, முன்னாள் அதிபர் சந்திரிகாவின் தம்பி அனுரா பண்டார நாயகேஉள்ளிட்ட 3 அமைச்சர்களை, இலங்கை அதிபர் ராஜபக்ஷே நீக்கியுள்ளார்.
இலங்கையில் தற்போது சுதந்திராக் கட்சி, கூட்டணி ஆட்சியை நடத்தி வருகிறது. தனது கட்சி அரசைபெரும்பான்மை பலம் கொண்ட அரசாக மாற்றும் நடவடிக்கையில் இறங்கியுள்ளார் அவர்.
இதற்காக முக்கிய எதிர்க்கட்சியான முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவின் ஐக்கிய தேசியக் கட்சியைதுண்டு துண்டாக உடைத்து வருகிறார் ராஜபக்ஷே.
முதலில் 18 எம்.பிக்களை ரணில் கட்சியிலிருந்து இழுத்து அவர்களை அமைச்சராக்கினார். தற்போது மேலும் 10பேர் விலகவுள்ளனர். இவர்களையும் அமைச்சர்களாக்க அவர் திட்டமிட்டுள்ளார்.
ராஜபக்ஷேவின் இந்தப்போக்குக்கு அமைச்சர்கள் அனுரா பண்டாரநாயகே, மங்கள சமரவீரா, ஸ்ரீபதி ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து வெளியுறவுத் துறை அமைச்சர் பொறுப்பிலிருந்து சமரவீராவை மாற்றிய ராஜபக்ஷே, அவருக்கு உப்புச் சப்பில்லாத துறையைகொடுத்தார்.
ஸ்ரீபதிக்கு எந்த இலாகாவும் கொடுக்காமல் சும்மா வைத்திருந்தார். அனுராவை மட்டும் விட்டு வைத்திருந்தார். இந்த நிலையில் அனுரா உள்ளிட்ட 3பேரின் பதவிகளையும் பறித்துள்ளார் ராஜபக்ஷே.
ராஜபக்ஷேவின் இந்த அதிரடி நடவடிக்கையால் இலங்கை அரசியலில் பெரும் பரப்பு ஏற்பட்டுள்ளது. அனுரா தலைமையில் ராஜபக்ஷேவுக்குஎதிராக புதிய நடவடிக்கைகள் தொடங்கும், இலங்கையில் பெரும் நெருக்கடி ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications