காவிரி-கருணாநிதி வேடிக்கை பார்க்கிறார்-நெடுமா
மதுரை:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்த முதல்வர் கருணாநிதியின் நிலைப்பாடு சரி இல்லை என்று தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன்விமர்சித்துள்ளார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் நெடுமாறன் பேசுகையில், காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பு குறித்த முதல்வர் கருணாநிதியின் நிலைப்பாடு சரியில்லை.உடனடியாக அவர் மத்திய அரசை அணுகி, இந்தப் பிரச்சினையை அரசியலமைப்புச் சட்டத்தின் 262வது பிரிவு மற்றும் ஆற்றுப் படுகைச் சட்டம்1956 ஆகியவற்றின் கீழ் தீர்க்க வலியுறுத்த வேண்டும்.
நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு மிகவும் மோசமானது. தமிழகத்திற்கு மிகப் பெரிய ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.
இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண ஆற்றுப் படுகைச் சட்டம் 1956ஐ பிரயோகப்படுத்த வேண்டும் என மத்திய அரசிடம் தமிழக அரசு வலியுறுத்தவேண்டும். இந்த சட்டத்தின் மூலம் மாநிலங்களுக்கு இடையிலான நதிகளை மத்திய அரசு தனது பொறுப்பில் எடுத்துக் கொண்டு, பிரச்சினைக்குத்தீர்வு காண முடியும்.
கொடுமை என்னவென்றால் இந்த சட்டம் அமலுக்கு வந்தது முதல் இதுவரை ஒரு முறை கூட இதை மத்திய அரசு பயன்படுத்தியதில்லை.
நடந்து வரும் நிகழ்வுகளை முதல்வர் கருணாநிதி அமைதியாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார். அதை கைவிட்டு விட்டு, உடனடியாக ஆற்றுப்படுகை சட்டத்தை மத்திய அரசு பிரயோகிக்க வலியுறுத்த வேண்டும், தமிழக விவசாயிகளைக் காக்க முன்வர வேண்டும்.
காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பு குறித்து மக்களிடையே முதல்வர் கருணாநிதி தவறான கருத்தை ஏற்படுத்தி வருகிறார் என்றே நான்நினைக்கிறேன்.
இந்தத் தீர்ப்புக்கு முன், கர்நாடகம் 170 டிஎம்சி தண்ணீரைப் பெற்று வந்தது. ஆனால் இப்போது அவர்களுக்கு இதை விட கூடுதலாக நீர்கிடைத்துள்ளது. அதேசமயம், தமிழகத்திற்கான பங்கு வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது.
மேலும், மேட்டூரிலிருந்து தண்ணீரை அளவிடுவதற்குப் பதில் பில்லிகுண்டுவிலிருந்து அளவிட நடுவர் மன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும்,கர்நாடகத்தின் மேகதாடு என்ற இடத்தில் புதிதாக அணை கட்டவும் நடுவர் மன்றம் அனுமதி அளித்துள்ளது. இவை அனைத்துமே தமிழகத்திற்குகேடு விளைவிக்கக் கூடிய அம்சங்கள் தான்.
காவிரியைப் போன்ற நிலை முல்லைப் பெரியாறு விஷயத்தில் நடந்து விடக் கூடாது. எனவே தமிழக அரசு முன்னெச்சரிக்கையுடன் இருக்கவேண்டும். காவிரியைப் போல முல்லைப் பெரியாறு அணை விஷயத்திலும் கேரளத்திடம் தமிழகம் ஏமாந்து விடக் கூடாது.
உச்சநீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தாமல் முரண்டு பிடிக்கும் கேரள அரசு மீது கடும் நடவடிக்கை எடுக்க மத்திய அரசை தமிழக அரசுவலியுறுத்த வேண்டும்.
பெரியாறு அணையின் உயரத்தை 136 அடியிலிருந்து 142 அடியாக உயர்த்த நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தக்கோரி 5 நாள் பாதயாத்திரை இயக்கம் நடத்த தீர்மானித்துள்ளோம்.
வரும் 20ம் தேதி ராமநாதபுரத்திலிருந்து இந்த யாத்திரை தொடங்கும். கூடலூரில் முடிவடையும். யாத்திரையை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர்தொல். திருமாவளவன் தொடங்கி வைக்கிறார். முல்லைப் பெரியாறு பாசனப் பகுதியான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தேனிமாவட்டங்கள் வழியாக பாதயாத்திரை செல்லும்.
இலங்கைத் தமிழர்களுக்கு கொடுப்பதற்காக ரூ. 1 கோடி மதிப்பிலான உணவுப் பொருட்கள், மருந்துப் பொருட்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.இதுவரை ரூ. 70 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. மதுரை மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியின் மூலம் ரூ. 10 லட்சம் மதிப்புள்ளபொருட்கள் சேகரிக்கப்பட்டுள்ளன.
சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் மூலமாக இவை இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்படும் என்றார் நெடுமாறன்.












Click it and Unblock the Notifications