100% கர்நாடக பந்த்: பெங்களூரு ஸ்தம்பிப்பு
பெங்களூரு:காவிரி நடுவர் மன்றத் தீர்ப்பை எதிர்த்து கர்நாடகத்தில் இன்று முழு அடைப்பு நடந்தது. இதனால் பெங்களூரு, மைசூர் உள்ளிட்ட நகரங்களில்இயல்பு நிலை முற்றிலும் பாதிக்கப்பட்டது. தமிழர்கள் அதிகம் வசிக்கும் நகரங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முழு அடைப்புக்கு கன்னட அமைப்புகள், விவசாய அமைப்புகள் தவிர பாஜகவும் ஆதரவு தெரிவித்தன. அதேசமயம், மாநிலத்தோடு ஒத்துப்போவது என்ற அடிப்படையில், தமிழர் கட்சிகள், அமைப்புகளும் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தன.
முழு அடைப்பைத் தொடர்ந்து பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டன.
அரசு-தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், டாக்சிகள் ஆகியவை ஓடவில்லை. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. வர்த்தகநிறுவனங்களும், சாப்ட்வேர் நிறுவனங்களும் முழுமையாக மூடப்பட்டன. கடைகள், ஹோட்டல்கள் அனைத்தும் மூடப்பட்டுவிட்டன. பெட்ரோல்பங்குககளும் கூட மூடப்பட்டுவிட்டன.
இதனால் பெங்களூரு நகரமே வெறிச்சோடிக் கிடந்தது. சாலைகளில் வாகன நடமாட்டம் இல்லை. அவசிய வேலைகளுக்கு வெளியே செல்பவர்கள்கூட பெரும்பாலும் நடந்தே சென்றனர்.
கன்னட கொடியை கட்டியபடி சில கார்களும் போலீஸ் வாகனங்களும் மட்டுமே சாலைகளில் வலம் வந்தன.
நேற்று மாலையே பெங்களூரு நகரில் பரபரப்பு தொற்றிக் கொண்டு விட்டது. பல கடைகள் நேற்று மாலையே அடைக்கப்பட்டு விட்டன. இரவு வரவர வாகனப் போக்குவரத்தும் கூட கணிசமாக குறையத் தொடங்கியது.
தமிழர்கள் அனைவரும் கலவர பீதியில் வீட்டுக்குள் அடைந்து கிடக்கின்றனர். பலர் குடும்பங்களோடு முன்னெச்சரிக்கையாக தமிழகத்திற்குள் வந்துவிட்டனர்.
மிக பலத்த பாதுகாப்பு:
பெங்களூரில் தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளில் மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்தப் பகுதிகளில் மாநில போலீசாருடன் மத்தியபாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
பெங்களூரில் மட்டும் 20,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். சிவாஜி நகர், ராஜாஜி நகர், வசந்த நகர், சாந்தி நகர்உள்ளிட்ட தமிழர் பகுதிகளில் துணை ராணுவப் படையினர் அதிக அளவில் நிறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழக பஸ்கள் ரத்து:
பந்தையொட்டி தமிழகத்திலிருந்து கர்நாடகத்திற்குச் செல்லும் வாகனங்கள் நேற்று மாலை முதல் மீண்டும் நிறுத்தப்பட்டன.
ஓசூர் (கிருஷ்ணகிரி மாவட்டம்), கோவிந்தப்பாடி (ஈரோடு) வரை மட்டுமே தமிழக பகுதியிலிருந்து செல்லும் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.
மைசூர் நகரிலும் போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். இரு நகரங்களிலும் விரைவு அதிரடிப்படையினர், கலவரத் தடுப்பு வாகனங்கள்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கன்னட படப்பிடிப்புகள் ரத்து:
கர்நாடக நடுவர் மன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து நடக்கும் பந்துக்கு கன்னட திரையுலகினரும் முழு ஆதரவளித்துள்ளனர்.
திஇன்று கன்னட படப்பிடிப்புகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. நடிகை சரோஜா தேவி, நடிகரும் எம்பியுமான அம்பரீஷ் ஆகியோர்தலைமையில் நாளை பிரமாண்டப் பேரணியும் நடத்தப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications