நிலவில் இறங்கும் சாட்டிலைட்-இந்தியா திட்டம்
சென்னை:2008ம் ஆண்டில் நிலவுக்கு செயற்கைக் கோளை அனுப்ப இந்தியா திட்டமிட்டுள்ளது.
இதற்காக சந்த்ராயன்-1 என்ற 600 கிலோ எடை கொண்ட செயற்கைக் கோளை இஸ்ரோ உருவாக்கி வருகிறது.
இந்த செயற்கைக் கோள் பூமியில் இருந்து ஏவப்பட்ட 5 நாட்களில் நிலவின் சுற்றுப் பாதையை அடையும். நிலவை 100 கி.மீ. உயரத்தில் இருந்தபடி 2ஆண்டுகளுக்கு சுற்றி வந்து ஆராயும்.
சந்த்ராயன்-1 செயற்கைக் கோள் நிலவின் சுற்றுப் பாதையை அடைந்த ஒரு மாதத்தில் அதிலிருந்து பிரியும் மூன் இம்பேக்டர் புரோப் என்றவிண்கலம் நிலவுக்குள் தரையிறங்கும்.
சந்த்ராயன் செயற்கைக் கோளில் இருந்து பிரிந்த 20 நிமிடத்தில் இந்த விண்கலம் நிலவில் தரையிறங்கி வேதியியல் ஆய்வுகளை நடத்தும்.
இஸ்ரோவின் திருவனந்தபுரம் விண்வெளி மையத்தில் இந்த மூன் இம்பேக்டர் புரோப் உருவாக்கப்பட்டு வருகிறது. இது 29 கிலோ எடைகொண்டதாக இருக்கும். சாதாரண கம்ப்யூட்டர் சிபியுவின் அளவில் இது இருக்கும்.
இதை உருவாக்க ரூ. 4 கோடி செலவு பிடிக்கும் என்று தெரிகிறது.
இந்த முயற்சியில் வென்றால் அடுத்ததாக நிலவில் பயணிக்கும் ரோவரை அனுப்பவும் அதைத் தொடர்ந்து மனிதனை விண்ணுக்கு அனுப்பவும்இஸ்ரோ தயாராகி வருகிறது.
நிலவில் இம்பேக்டர் புரோப் வெற்றிகரமாக தரையிறங்கினால், அமெரிக்கா, ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக நிலவில் விண்கலத்தை இறக்கியமூன்றாவது நாடாக இந்தியா திகழும்.












Click it and Unblock the Notifications