சிறுமி கிளப்பிய புரளி-போலீஸ் டென்ஷன்
சென்னை:சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக 6 வயது சிறுமிய கிளப்பிய புரளியால் போலீஸார் படு டென்ஷனாகி விட்டனர்.
காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று மாலை ஒரு அழைப்பு வந்தது. அதில் பேசியவர், விமான நிலையத்தை பத்திரமாக பார்த்துக்கொள்ளுங்கள், அங்கு குண்டு வெடிக்கப் போகிறது என்று கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த போலீஸார் விமான நிலைய காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து வெடிகுண்டு நிபுணர்கள்வரவழைக்கப்பட்டு தீவிர சோதனை நடத்தப்பட்டது. ஆனால் குண்டு எதுவும் சிக்கவில்லை.
இந்த நிலையில் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது என்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். அது ஒரு செல் போன் எண். அந்த எண்ணைக்கண்டுபிடித்து போலீஸார் அந்த எண்ணைத் தொடர்பு கொண்டு பேசினர்.
வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது குறித்து போலீஸார் செல்போனில் பேசிய நபரிடம் கூறியபோது, எனது 6 வயது மகள்தான் இதுபோலசெய்து விட்டாள். தெரியாமல் செய்து விட்டாள், மன்னித்து விடுங்கள் என்று அந்த நபர் கெஞ்சியுள்ளார்.
இதையடுத்து முகவரியைக் கேட்டு வாங்கிய போலீஸார் அந்த வீட்டுக்கு விரைந்து சென்றனர். மிரட்டல் விடுத்தது 6 வயது சிறுமிதான் என்பதைஉறுதிப்படுத்திக் கொண்ட போலீஸார் அவரது பெற்றோரை கடுமையாக எச்சரித்து விட்டு கிளம்பிச் சென்றனர்.
6 வயது சிறுமியின் இந்த விளையாட்டுத்தனத்தால் கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் விமான நிலையம் பரபரப்பில் மூழ்கிக் கிடந்தது.












Click it and Unblock the Notifications