ஜெ மீது அவதூறு வழக்கு-பொன்முடி வார்னிங்
விழுப்புரம்:விழுப்புரம் நகராட்சி பிரசவ விடுதி விவகாரம் தொடர்பாக என் மீது பொய்யான குற்றச்சாட்டுக்களைச் சுமத்தி, களங்கம் ஏற்படுத்தும் வகையில்பொய் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள அதிமுக பொதுச் செயலாளர் மீது அவதூறு வழக்கு தொடரப் போவதாக அமைச்சர் பொன்முடி கூறியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், விழுப்புரம் நகராட்சி பிரசவ விடுதி இடமாற்றம் தொடர்பான பிரச்சனையில் முன்னாள்முதல்வர் ஜெயலலிதா மக்களை திசை திருப்பும் வகையில் தொடர்ந்து தவறான செய்தியை சொல்லி வருகிறார்.
சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நகர வளர்ச்சி குறித்த கலந்தாய்வு கூட்டத்தில் நகராட்சி பிரசவ விடுதி தொடர்பாக அனைவராலும்விவாதிக்கப்பட்டு, அனைவராலும் ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டு நகராட்சியில் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
ஆனால் இதற்கு நேர் மாறாக பேசி வருகிறார் ஜெயலலிதா. விழுப்புரம் மாவட்டத்தில் மக்கள் செல்வாக்கை அதிமுக இழந்து விட்டது.மாவட்டத்தில் ஒரு ஒன்றியத்தில் மட்டுமே அக்கட்சியால் வெற்றி பெற முடிந்தது.
இதனால் ஏற்பட்ட வயிற்றெரிச்சலில், ஜெயலலிதா ஆத்திரத்தில் ஏதாவது பொய்களை சொல்லி மக்களை திசை திருப்பி குழம்பிய குட்டையில் மீன்பிடிக்க முயற்சி செய்கிறார்.
அந்த வகையில்தான் நகராட்சி பிரசவ விடுதி இடமாற்ற விவகாரத்தில் எது உண்மை, எது பொய் என்று தெரியாமல் அறிக்கை விட்டிருக்கிறார்.ஜெயலலிதா கூறியிருப்பதை போல் அந்த மருத்துவமனைக்கு பின்னால் எனக்கோ, என் சகோதரருக்கோ சொந்தமான இடம் எதுவுமில்லை.
அப்படி ஏதாவது இருக்குமானால், அப்படி நிலம் உள்ளது என்பதை ஜெயலலிதா நிருபித்தால் நான் அரசியலை விட்டே விலகுகிறேன்.ஜெயலலிதா கட்சியை கலைத்துவிட்டு ஓடிப்போக தயாரா?
கடந்த 5 ஆண்டுகளாக நகராட்சியை நடத்தவிடாமல் முடக்கி வைத்து விட்டு நகரில் ஒரு சிமெண்ட் சாலை கூட போடாததற்கு காரணமாயிருந்தசைத்தான் இன்று வேதம் ஓத ஆரம்பித்திருக்கிறது.
என் மீதும் என் சகோதரர் மீதும் சொல்லியிருக்கும் குற்றச்சாட்டுகளை எதிர்த்து நானும் என் சகோதரர் டாக்டர் தியாகராஜனும் நீதிமன்றத்தில்ஜெயலலிதா மீது உடனடியாக வழக்கு தொடர உள்ளோம்.
திண்டிவனம் புதிய பஸ் நிலைய விவகாரத்திலும் உண்மை நிலை தெரியாமல், உள்ளூர் கட்சிக்காரர்களின் பேச்சை கேட்டு தவறாக தகவல்களைபரப்பி வருகிறார் ஜெயலலிதா.
மக்கள் செல்வாக்கை இழந்து விட்ட ஜெயலலிதா, எதையாவது பிடித்து கரையேற முடியாதா என்று உண்ணாவிரத போராட்டங்களைஅறிவித்திருக்கிறார் என்றார் பொன்முடி.