சங்கரராமன் கொலை-மேலும் 5 பேருக்கு ஜாமீன்
சென்னை:காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கில் மேலும் 5 பேருக்கு நிபந்தனை ஜாமீன் அளித்து சென்னைஉயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
2004ம் ஆண்டு நவம்பர் மாதம் வரதராஜ பெருமாள் கோவில் அலுவலகத்திற்குள் வைத்து சங்கரராமன் வெட்டிக் கொல்லப்பட்டார்.
இதுதொடர்பாக காஞ்சி சங்கராச்சாரியார்கள் ஜெயேந்திரர், விஜயேந்திரர் அவரது தம்பி ரகு, கூலிப் படைத் தலைவன் அப்பு உட்பட 20 பேர் கைதுசெய்யப்பட்டனர். இதில் ஜெயேந்திரர், விஜயேந்திரர், அப்பு உட்பட 10 பேர் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர்.
இந் நிலையில் கடலூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்ட அனில்குமார், கே.எஸ்.குமார், ஆனந்தகுமார், கதிரவன், ஜின்னா ஆகியோர்ஜாமீன் கேட்டு உயர்நீதிமன்றத்தில் மனு செய்தனர். இந்த மனு மீதான விசாரணை நடந்தபோது அரசு வழக்கறிஞர் துரைராஜ் ஆஜராகி,அனில்குமார் உட்பட ஐந்து பேரூம் கொலை வழக்கில் நேரடியாக தொடர்பு உடையவர்கள். எனவே அவர்களுக்கு ஜாமீன் அளிக்க கூடாதுஎன்றார்.
இதற்கு எதிர்தரப்பு வக்கீல்கள், முக்கிய குற்றவாளிகளே ஜாமீனில் வெளியே வந்து விட்டதாக தெரிவித்தனர்.
இந்த வாதத்தை ஏற்ற நீதிபதி ரகுபதி, 5 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். மேலும், ரூ. 10,000 சொந்த ஜாமீன், அதற்கு ஈடான இரு நபர்ஜாமீன் செலுத்தி காஞ்சிபுரம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்றுக் கொள்ளலாம் என தனது உத்தரவில் தெரிவித்தார்.
மறு உத்தரவு வரும் வரை புதுச்சேரியில் தங்கி அங்குள்ள நீதிமன்றத்தில் தினமும் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும் என்றும் அவர்களுக்குநிபந்தனை விதிக்கப்பட்டது.