கேரளாவுக்கு எதிரான பந்த்: ஸ்தம்பித்ததிருப்பூர், பல்லடம், மேட்டுப்பாளையம்
திருப்பூர்:சேலம் கோட்டம் அமைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் கேரளாவைக் கண்டித்து கோவையை தொடர்ந்து திருப்பூர், பல்லடம், மேட்டுப்பாளயம்ஆகிய ஊர்களில் இன்று பந்த் நடந்தது. திருப்பூரில் பனியன் நிறுவனங்கள், சாயப் பட்டறைகள் மூடப்பட்டன. வாகனப் போக்குவரத்து முற்றிலும்நிறுத்தப்பட்டது.
சேலத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ரயில்வே கோட்டம் அமைக்க மத்திய அரசு தீர்மானித்தது. அதன் அடிப்படையில் சேலம் கோட்டத்தில்திருப்பூர், கோவை, போத்தனூர், ஈரோடு உள்ளிட்ட பகுதிகள் சேர்க்கப்பட்டு சேலத்தில் புதிய ரயில்வே கோட்டம் செயல்பட தொடங்கியது.
இந்நிலையில் சேலம் ரயில்வே கோட்டத்தை செயல்பட விடாமால் தடுப்பதற்கான முயற்சிகளில் கேரள அரசும், அங்குள்ள அரசியல் கட்சிகளும்,அமைப்புகளும் ஈடுபட்டுள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த செவ்வாய்க்கிழமை கோவையில் முழு அடைப்பு போராட்டம் நடந்தது. இதை தொடர்ந்து இன்றுமேட்டுப்பாளையம், திருப்பூர், பல்லடத்தில் பந்த் நடந்தது.
காலை 6 மணிக்கு பந்த் தொடங்கியது. பந்த் காரணமாக பஸ், லாரி, ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் ஓடவில்லை. சினிமா காட்சிகளும் ரத்துசெய்யப்பட்டன. கடைகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.
திருப்பூரில் 4000க்கும் மேற்பட்ட பனியன் நிறுவனங்கள், 500க்கும் மேற்பட்ட சாயப்பட்டறைகள் மூடப்பட்டு விட்டன. இரு பஸ் நிலையங்களும்பயணிகள் யாருமின்றி வெறிச்சோடிக் கிடந்தன.
மக்கள் கூட்டம் மிகுந்து காணப்படும் திருப்பூர் நகரமே வெறிச்சோடிக் கிடந்தது. பந்த் முழுமையான அளவில் நடந்தது. கிட்டத்தட்ட 5 லட்சம்தொழிலாளர்கள் இன்று வேலைக்கு போகவில்லை. ரூ. 500 கோடி அளவிலான வர்த்தகம் முடங்கிப் போனது.
கேரளாவுக்கு செல்லும் ரயிலை திருப்பூர் ரயில் நிலையத்தில், சட்டக் கல்லூரி மாணவர்கள் தடுத்து நிறுத்தி மறியல் செய்தனர். இதுதொடர்பாக 9பேரை போலீஸார் கைது செய்தனர். வக்கீல்களும் இன்று நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
திருப்பூரைப் போலவே பல்லடம், மேட்டுப்பாளையம் ஆகிய ஊர்களிலும் பந்த் முழு அளவில் நடந்தது. பல்லடம் மார்க்கெட் மூடப்பட்டது.
மேட்டுப்பாளையத்தில் லாரிப் போக்குவரத்து முற்றிலும் முடங்கிப் போனது. கோவை உள்ளிட்ட பகுதிகளிலிருந்து மேட்டுப்பாளையம் வழியாகசெல்லும் வாகனங்கள் செல்லவில்லை. பள்ளி, கல்லூரிகள், வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டன.
மேட்டுப்பாளையத்தில் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. அருண்குமார் தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடந்தது. இதனால் கோவை செல்லும்பாசஞ்சர் ரயில் 20 நிமிடம் தாமதமாக கிளம்பிச் சென்றது.