போலீஸுக்கு அடி-எப்ஐஆர் கிழிப்பு-ஜீப் உடைப்பு கைதான வக்கீலை மீட்டுச் சென்ற ஆதரவாளர்கள்!
சென்னை:சென்னையில் திமுக பிரமுகரைத் தாக்கியதாக கூறப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட பகுஜன் சமாஜ் கட்சி வழக்கறிஞரை, அவரதுஆதரவாளர்களும், சக வழக்கறிஞர்களும், நீதிமன்ற வளாகத்தில் வைத்து போலீஸாரைத் தாக்கி மீட்டுச் சென்றனர். இந்த அமளியில் போலீஸ்ஜீப்பின் கண்ணாடி உடைக்கப்பட்டது.
சென்னை கன்னிகாபுரம் ஜோசப் தெருவைச் சேர்ந்தவர் பாலமுருகன். எழும்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக உள்ளார். இவர் மாநகராட்சியின்40வது வார்டில் நடந்த மறு தேர்தலில் திமுக வேட்பாளர் கன்னியப்பனை எதிர்த்துப் போட்டியிட்டார்.
வாக்குப்பதிவின்போது கன்னியப்பனின் ஆதரவாளர்கள் கள்ள ஓட்டுப் போடுவதாக கூறி நூற்றுக்கணக்கானோருடன் பாலமுருகன் சாலை மறியல்செய்தார். பின்னர் அதிகாரிகள் தலையிட்டு அவர்களை கலைந்து போகச் செய்தனர்.
இதுதொடர்பாக அனைவர் மீதும் போலீஸார் வழக்கு தொடர்ந்தனர். இந் நிலையில் நேற்று காலை 11 மணிக்கு அதே பகுதியைச் சேர்ந்த சாக்ரடீஸ்என்ற திமுக பிரமுகர் புளியந்தோப்பு காவல் நிலையத்தில் புகார் ஒன்றைக் கொடுத்தார். தன்னை பாலமுருகனும் அவரது ஆட்களும் வந்துதாக்கியதாக அதில் கூறியிருந்தார்.
இதையடுத்து பாலமுருகனை விசாரணைக்காக அழைத்துச் சென்றனர். விசாரணையில், சாக்ரடீஸை பாலமுருகன் தாக்கியது உண்மை எனத் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர்.
இதை அறிந்ததும் பாலமுருகனின் கட்சிக்காரர்கள், அப்பகுதி மக்கள், பெண்கள், வக்கீல்கள் என ஏராளமானோர் காவல் நிலையத்திற்கு வந்தனர்.பாலமுருகனை விடுவிக்குமாறு கூறி கோஷமிட்டனர்.
இதையடுத்து பாலமுருகனை ஜீப்பில் ஏற்றி எழும்பூர் கோர்ட்டுக்கு போலீஸார் கொண்டு சென்றனர். பாலமுருகனின் ஆதரவாளர்களும்பின்தொடர்ந்து சென்றனர். அங்கு சென்றபோது மேலும் பல வக்கீல்கள் சேர்ந்து விட்டனர்.
அனைவரும் சேர்ந்து பாலமுருகனை விடுவிக்கக் கோரி முற்றுகையிட்டு கோஷம் போட்டனர். நீதிபதி முன்பு பாலமுருகனை கொண்டு செல்லபோலீஸார் முயன்றபோது முடியவில்லை.
அப்போது சில வக்கீல்கள், போலீஸார் வைத்திருந்த முதல் தகவல் அறிக்கையைப் பறித்து கிழித்து எறிந்தனர். சில போலீஸாருக்கு சரமாரியாக அடிவிழுந்தது. அத்தனை வக்கீல்களும் சேர்ந்து கொண்டு போலீஸாரை நீதிமன்ற வளாகத்திலிருந்து துரத்தி அடித்தனர்.
பின்னர் பாலமுருகன் கொண்டு வரப்பட்ட போலீஸ் ஜீப்பும் கடும் தாக்குதலுக்கு ஆளாகியது. இதில் ஜீப்பின் கண்ணாடி உடைந்தது. பின்னர்கும்பலில் ஒரு பிரிவினர் பாலமுருகனை மீட்டு அங்கிருந்து கொண்டு சென்று விட்டனர்.
வக்கீல்கள் திரண்டு வந்து கட்சிக்கார்களின் துணையோடு நிகழ்த்திய இந்த வன்முறைச் சம்பவத்தால் எழும்பூர் நீதிமன்ற வளாகம் போர்க்களம்போலக் காணப்பட்டது. 2 போலீஸார் இந்த தாக்குதலில் காயமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் குறித்து சென்னை உயர்நீதிமன்ற பதிவாளரிடமும், பார் கவுன்சிலிடமும் போலீஸ் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. எழும்பூர் காவல்நிலையத்திலும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications