யோபு கூட்டாளிகள் கைது; கார்,பணம் பறிமுதல்
சென்னை:போலி பிஷப் யோபு சரவணனின் 2 கூட்டாளிகளை சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ. 4 லட்சம்பணம், நான்கு சொகுசு கார்களைப் பறிமுதல் செய்தனர்.
சர்வதேச கல்வாரி மிஷன் என்ற பெயரில் அறக்கட்டளையை நடத்தி வந்தவர் யோபு சரவணன். தன்னைத் தானே பிஷப்பாக கூறிக் கொண்டு,ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம் என்ற பெயரில் தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான காண்டிராக்டர்களிடம்பல கோடி பணத்தை மோசடி செய்த வழக்கில் யோபு சிக்கினார்.
சிறிது கால தலைமறைவுக்குப் பின்னர் யோபு சரவணன் மற்றும் அவரது உதவியாளர் ராஜேந்திரன் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில்அடைக்கப்பட்டனர். யோபுவிடமிருந்து ஏராளமான சொத்து ஆவணங்களைப் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
இந்த நிலையில் தலைமறைவாக இருந்த யோபுவின் முக்கிய கூட்டாளிகளான அறக்கட்டளை மேலாளர் செளந்தரராஜனை திருவல்லிக்கேணியில்உள்ள அவரது வீட்டில் வைத்து போலீஸார் கைது செய்தனர். இவர் திருச்சியைச் சேர்ந்தவர். யோபுவின் நெருங்கிய நண்பராவார். இவரிடமிருந்து2 சொகுசு கார்கள் மற்றும் ரூ. 2.20 லட்சம் பணத்தையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இவர் கொடுத்த தகவலின் பேரில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த பால்ரவி சஞ்சீவி என்ற பெருமாளை போலீஸார் வளைத்துப்பிடித்தனர். இவர் சென்னை அண்ணா நகரில் ஒரு லாட்ஜில் தங்கியிருந்தபோது பிடிபட்டார். இவரிடமிருந்து 2 கார்கள் மற்றும் ரூ. 2.50 லட்சம்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதவிர கே.கே.நகரில் உள்ள ஒரு வீட்டின் பத்திரமும் சிக்கியது.
மோசடி வழக்கில் இவர்களைத் தவிர மேலும் ஐந்து பேரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications